ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 13. காய சித்தி உபாயம்

பதிகங்கள்

Photo

நீல நிறமுடை நேரிழை யாளொடுஞ்
சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்கு
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனு மாவர் பராநந்தி ஆணையே. 

English Meaning:
Eternal Youth Through Yoga

They who effect the mystic union
With the azure-hued Sakti within
Will shed greying and wrinkling
And regain youth for all to see;
This I say is true, by Nandi the Great.
Tamil Meaning:
பிராணனை முந்தி முகட்டில் நிறுத்திய பின், அதற்கு மேலே உள்ள ஏழாந்தானமாகிய உச்சியில் திருவருளோடு நேரே கூடி, ``இத்திருவருளல்லது பிறிதொன்றும் நிலையுடையதன்று`` என்பதை எவரேனும் உணர்ந்திருப்பார்களாயின், அவர்கள் ஆன்ம லாபத்தைப் பெறுதலேயன்றி, நரை திரை அணுகாது, என்றும் இளமையோடு இருக்கும் நன்மையையும் அடைவர். இஃது எங்கள் ஆசிரியர் ஆணை யாகச் சொல்லப்படும் உண்மை.
Special Remark:
``குண்டலி சத்தியன்றிச் சிவசத்தி`` என்பது உணர்த் துதற்கு, ``நீலநிறமுடை நேரிழையாள்`` என்றார். ஆறாந்தானமாகிய ஆஞ்ஞை விந்துத்தானமாகலின், அதற்கு மேலுள்ள உச்சி சத்தித் தானமாம். சத்தி அருவ நிலையது ஆகலானும், அதில் அருவுருவ நிலையாகிய ஆஞ்ஞையினும் மிக விளக்கமாகத் திருவருள் விளங்கு மாகலானும் அதனையே, ``நீல நிறமுடை நேரிழையாளொடும் சாலவும் புல்லி`` என்றார். ``பாலனும் ஆவர்`` என்ற உம்மை, இறந்தது தழுவிய எச்சம். ``ஆவர்`` என்றது, ``ஆதலை மிகப் பெறுவர்` என்றவாறு. பராநந்தி - பரானந்தத்தை எய்தியவர், பரானந்தம் - மேலாய இன்பம்; சிவானந்தம்.
இதனால், `காய சித்தி பெற்றோன் அதனாலாம் பயனை மிகப் பெறுவானாயின், அதனானே, காய சித்திப் பயனும் மிகும்` என்பது கூறப்பட்டது.