ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 27. கள்ளுண்ணாமை

பதிகங்கள்

Photo

யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்தப்
போத அமுதைப் பொசித்தவர் எண்சித்தி
மோகியர் கள்ளுண்டு மூடராய் மோகமுற்
றாகும் மதத்தால் அறிவழிந் தாரே.

English Meaning:
The yogis who, breath in control held, yearn for
The nectared delights of Contemplation`s Moon,
The eight Siddhis they seek; but witless fools are they
Who to toddy yield and in its heady joys let their senses swoon.
Tamil Meaning:
உண்மை யோகிகள் ஆவார், பிராண வாயுவைத் தடுத்து அதனால் எழும் மூலக் கனலால் புருவ நடுவில் உள்ள சந்திர மண்டலத்தில் ஊறும், அறிவை வளர்க்கின்ற, இனிய அமுதத்தை உண்பவரே. (அவ்வமுதம் சிவானந்தத் தேறலில் இச்சையுண்டாக்கும்) அந்நிலையைப் பெறாத சிலர் அணிமா முதலிய சித்திகளில் இச்சையுடையராய்க் கள்ளை உண்டு மயக்கம் உற்று, அம்மயக்கத்தால் எழும் உன்மத்தம் உடையராய் அறிவழிகின்றனர்.
Special Remark:
எனவே, `வாம மதத்தவரேயன்றி, யோகம் முற்றப் பெறாது இடைநிற்கும் சிலரும் வாம மதத்தவரோடு ஒத்து ஒழுகினும், அவர் ஒழுக்கம் கொள்ளத்தக்கது அன்று` என்றதாயிற்று.
இதனால், `கள்ளுண்பார் சிலர் சித்தியுடையராயும் இருத் தலைக் காண்கின்றோம் ஆகையால், அவர் ஒழுக்கம் இகழற்பாலது அன்று` என்பாரை நோக்கி, அவரது நிலையும் உயர்வுடையது ஆகாமை காட்டி, `எவ்வாற்றானும் கள்ளுண்டல் ஒழுக்கம் ஆகாது` என்பது வலியுறுத்தப்பட்டது.
பதிப்புக்களில் இதன்பின் உள்ள பாட்டுப் பின்னர் வருவது.
முதல் தந்திரம் மூலமும் உரையும் முற்றிற்று.