ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 27. கள்ளுண்ணாமை

பதிகங்கள்

Photo

வாமத்தோர் தாமும் மதுவுண்டு மாள்பவர்
காமத்தோர் காமக்கள் ளுண்டே கலங்குவர்
ஓமத்தோர் உள்ளொளிக் குள்ளே உணர்வர்கள்
நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே. 

English Meaning:
They drink and perish, who to the Vama sect belong,
The lustful ones in sensual delights are wholly lost;
But the pure souls find the Light of sacrifices in their inner flame;
They, who His true Name chant, approach Him fast.
Tamil Meaning:
`சத்தியை வழிபடுகின்றோம்` என்று சொல்லிக் கொள்ளும் அவைதிகராகிய வாம மதத்தினரும், அக் கொள்கை இல்லாதே கள்ளுண்ணும் மடவோர் போலக் கள்ளுண்டு அறிவு அழிபவரேயன்றிச் சிறப்பு ஒன்றும் இலர். இனிக் காமத்தை மட்டும் விரும்புபவர் அறிவு அழியப்பெறாராயினும், மயக்கம் உடையவரே. (ஆகவே, கள், காமம் இரண்டையும் போற்றிக் கூறும் சமயங்களால் உய்தி கூடாது) அவ்விரண்டையும் வெறுத்தொதுக்கும் வைதிக சமயிகளே வழிமுறைக் காலத்தில் அறிவினுள் அறிவாய் நிற்கின்ற முதற்பொருளினுள் ஒடுங்கி அதன் இன்பத்தை நுகர்வர். சிவநாமத்தை உய்யும் வழியாகப் பற்றும் சித்தாந்த சைவர் அவ்வின்பத்தை இடையீடின்றி அப்பொழுதே பெறுவர்.
Special Remark:
தந்திர மார்க்கத்தார் காமம் முதலிய தீயொழுக்கங் களைப் போற்றிக் கொள்ளுதலை,
வாழவே வல்லை,வாமி; வலக்கைதா; என் உயிர்க்குத்
தோழன்நீ; உன்னை ஒப்பார் சொல்லிடின் இல்லை கண்டாய்;
கோழைமா னுடர்தீ தென்னும் கொலைகள வாதி கொண்டே
சூழும்வார் குழலார் மொய்ப்பச் சுடரெனத் தோன்றினாயே.
-சிவஞானசித்தி - பரபக்கம் - உலகாயதன் மதம் - 15
என்னும் உலகாயதன் கூற்றாலும், அவர் ஒழுகுமாற்றாலும் அறிக. வாமம் முதலிய மதங்கள் தங்கள் நூல்களையும் `ஆகமம்` என்று சொல்லிக்கொள்வதால், ஆகமங்கள், `சுரௌதம், அசுரௌதம்` என இருவகைப்படும் எனப் பிரித்து, `வேதநெறியோடு முரணாத ஆகமங்கள் சுரௌதம்` என்றும், அதற்கு முரணான ஆகமங்கள் `அசுரௌதம்` என்றும் சொல்லப்பட்டு, அசுரௌதமாகிய ஆக மங்களே `தந்திரம்` எனவும், அவற்றை உடைய சமயங்கள் `தந்திர மார்க்கங்கள்` எனவும் விலக்கப்பட்டன. சிலவிடத்து, `தந்திரம்` என்றும், சிலவிடத்து `ஆகமம்` என்றும் கூறி அவற்றை இகழும் பகுதிகள் அசுரௌதமாகிய தந்திரங்களை இகழ்வனவேயாம். இவ் வேற்றுமை அறியாதார், சுரௌதமாகிய `திவ்வியாகமங்கள்` எனப்படும் சைவாகமங்களும் அத்தகையன போலும் என மயங்கிக் கூறியொழிவர். தந்திர மார்க்கங்களும் சைவாகமத்தை ஒருவாற்றால் தழுவுதல் பற்றி ஒரோவிடத்து, `சைவம்` எனக் கூறப்படுதலால், வேத சிவாகமங்களையன்றிப் பிறவற்றை முதல் நூலாகக் கொள்ளாத சிவநெறியை, `வைதிக சைவம்` என அடைகொடுத்து வழங்குதலும் உண்டு. எனவே உண்மை வைதிகத்திற்கும், சைவத்திற்கும் கள் ளுண்டலோடு சிறிதும் இயைபில்லாமை அறிக. இதனால், `சத்திக்கு உவப்பைத் தருவன கள்ளும் ஊனும்` என்று அவற்றை அவட்குப் படைத்துத் தாமும் உண்டு மகிழ்தல் வைதிகரும், சைவரும் ஆய உயர்ந்தோரல்லாத தாழ்ந்தோர்க்கேயாதல் உணர்க.
வாமத்தோர் - வாம மதத்தவர். இவர்கள் சத்தியே உலக முதல்வி என்று அவளை வணங்குவோர். இதனால், இவர்மதம், `சாத்தேயம்` எனப்படும். `அறிவழிதலின் இறந்தாரொடு ஒப்பர்` என்றற்கு, ``மாள்பவர்`` என்றார். ``நஞ்சுண்பார் கள்ளுண்பவர்`` (குறள், 926) என்பது திருவள்ளுவர் வாக்கு. ``ஓமத்தோர்`` என்றது, `வைதிகர்` என்றவாறு. பின்னர், `அன்றே` என்றமையால், முன்னர், `வழிமுறைக் காலத்தில்` என்பது பெறப்பட்டது. உணர்தல் நணுதல்கட்குச் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது.