ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 27. கள்ளுண்ணாமை

பதிகங்கள்

Photo

கழுநீர்ப் பசுப்பெறிற் கயந்தொறும் தேரா
கழுநீர் விடாய்த்துத்தங் காயஞ் சுருக்கும்
முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர்
செழுநீர்ச் சிவன்றன் சிவானந்தத் தேறலே. 

English Meaning:
The cow fed on broth of rice wanders not from tank to tank
The cow denied its drink of broth grows weak and lank
Who swill the toddy neat, from Righteouseness go astray
Truest drink is Sivananda, the Bliss Supreme, far and away.
Tamil Meaning:
பசுக்கள், அரிசி கழுவிய நீரைப் பெற்று உண்டு பழகி விட்டால், பின்பு குளத்தில் உள்ள தூயநீரை நாடிச் செல்லா; அக் கழு நீர்க்கே விடாய்த்துக்கொண்டு உடல் மெலியும். அத்தன்மைய வாய பசுக்கள் தம் இயல்பின் நீங்கினவாம். அதுபோல, கள்ளினைச் சுவையும், வலிமையும் நிறைந்த பருகுபொருளாக (பானமாக) நினைத்துக் கள்ளுண்பவர் மக்கள் இயல்பின் நீங்கினோராவர். மற்று, வளமையுடைய பருகு பொருள், சிவபெருமானது திருவடி இன்பமாகிய தேனே.
Special Remark:
`ஆதலின், அதுவே மக்கள் பருகற்பாலது` என்பது குறிப்பெச்சம். `ஞானிகள் கள்ளுண்டு களிப்பர்` என்னும் வழக்கிற்குப் பொருள் இதுவேயன்றிப் பிறிதன்று என்பது மேலே விளக்கப் பட்டது. கழுநீர், வினைத்தொகை. முழுமை - நிறைவு. ``முழுநீர், செழுநீர்`` என்பவற்றில் நீர், நீர்த்தன்மையுடைய பொருளைக் குறித்தது. முதல் அடியின் உண்மைப் பாடம் வேறாதல் வேண்டும். ``கழுநீர் பெறிற்பின் கயந்தேரா தேரா`` என்பதாதல் கூடும்.
இதனால், கள்ளுண்போர் மாக்களாதல் கூறப்பட்டது. மாக்களே, உண்ணப்படும் பொருளால் பின் விளைவதை அறியாது, கேடு பயக்கும் பொருளையும் உண்ணும் என்க.