ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 27. கள்ளுண்ணாமை

பதிகங்கள்

Photo

மயங்குந் தியங்குங்கள் வாய்மை அழிக்கும்
இயங்கும் மடவார்தம் இன்பமே எய்தி
முயங்கும் நடங்கொண்ட ஞானத்து முந்தார்
இயங்கும் இடையறா ஆனந்தம் எய்துமே.

English Meaning:
The fumes of wine stupor bring and destroy the Truth,
And make us seek the false, delusive joys of lust;
Such advance not to Wisdom true, of sweet reason compact.
Will such e`er attain the eternal Bliss truest?
Tamil Meaning:
தடுமாற்றத்திற்கும், அறியாமைக்கும் ஏதுவாகிய கள், வாய்மை முதலிய நல்லொழுக்கங்களைக் கெடுக்கும். அதனால் அதை உண்பவர் நாணம் இன்றித் தெருவில் திரிகின்ற பொதுமகளிர் இன்பத்தையே பெற்று, தாம் தம் இல்லாளொடு முயங்கிப் பெறும் இன்பத்தைத் தரும் அறிவைத் தலைப்படமாட்டார். அவர்க்கு என்றும் நீங்காத, இடையீடில்லாத இன்பம் உண்டாகுமோ!
Special Remark:
வாய்மை, உபலக்கணம்.
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று. -குறள், 913
என்பதனால், `பொருள் காரணமாகப் பொய்யாக முயங்கும் பொது மகளிரது இன்பம், பொருள் இல்வழி இழக்கப்படுதலே யன்றி உள்ள பொழுதும் உண்மையாவதன்று` என்றற்கு, ``இடையறா ஆனந்தம் எய்துமே`` என்றார். `வெண்ணெயைப் பெற்றும் நெய்க்கு அழுவான் போல, கற்புடை இல்லாளைப் பெற்றும் அவளால் இன்பத்தைப் பெறாது பொருட்பெண்டிரை நாடித் திரியும் பேதை மகன், கிடைத் தற்கரிய சிவானந்தத்தைப் பெயர்தானும் கேட்டறிவனோ` என்பதும், ``இடையறா ஆனந்தம்`` என்ற சொல்லாற்றலால் பெறுதும். ஏகாரம், எதிர்மறைப் பொருள் தந்தது.
இதனால், கள்ளுண்டல் கழிகாமத்தையும், பொய் களவு முதலிய பலகுற்றங்களையும் தருதல் கூறப்பட்டது.
இதன்பின் உள்ள பாட்டுப் பின்னர் வருவது.