ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 27. கள்ளுண்ணாமை

பதிகங்கள்

Photo

சத்தன் அருள்தரிற் சத்தி அருளுண்டாம்
சத்தி அருள்தரிற் சத்தன் அருளுண்டாம்
சத்தி சிவமாம் இரண்டுந்தன் னுள்வைக்கச்
சத்தியம் எண்சித்தித் தன்மையு மாமே. 

English Meaning:
If Saktan His Grace imparts, Sakti`s Grace we have,
If Sakti Her Grace imparts, Saktan`s Grace we gain,
Sakti and Siva, if Both in heart we hold,
Then in us, truly, the Siddhis eight do shine.
Tamil Meaning:
சத்திமானும், (சத்தியை உடையவனும்) சத்தியும் தன்மையால் இரண்டாதலல்லது, பொருளால் இரண்டாதல் யாண்டும் இல்லை. (இதனைத் தெரிவிக்கவே, `சிவன்` என்னாது சத்தன் என்றார்) ஆகவே, சிவமும், சத்தியும் தம்முள் வேறல்லர் என்பது வெளிப்படை. அதனால், முதற்பொருளை அடைய வேண்டுவார், `சத்தி, சிவம்` ஆகிய இரண்டனையும் ஒப்பக்கொள்ளல் வேண்டு மன்றி, அவற்றுள் ஒன்றனையே புகழ்ந்து கொள்ளுதலும், ஏனையதை இகழ்ந்து நீக்கலும் கூடாவாம். மேற்கூறியவாறு அவ்விரண்டனையும் ஒப்பக்கொண்ட வழியே எப்பயனும் கிடைத்தல் உறுதி.
Special Remark:
இரண்டிடத்தும் ``தரின்`` என்பவற்றில் பிரிநிலை ஏகாரங்கள் தொகுத்தலாயின. `சிவன், சத்தி என்னும் இருவருள் ஒருவர் அருள் இன்றி ஏனையோரது அருள் உண்டாக மாட்டாது` என்பது முதல் இரண்டடிகளில் கூறப்பட்டது. ``சத்தி சிவம்`` செவ் வெண். ``தன்`` என்றது, வழிபடுவோனை. சத்தியம் - உண்மை; இது தனிமுடிபு; இதற்கு, `இது` என்னும் தோன்றா எழுவாய் வருவித்து, இறுதியில் வைத்து உரைக்க. ``எண்சித்தித் தன்மையும்`` என்ற உம்மையால், `பிறவும்` என உரைக்க. எண்சித்தி, அணிமா முதலியன.
இதனால், வாமமதம் போலியாதல் தெளிவிக்கப்பட்டது.