ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 27. கள்ளுண்ணாமை

பதிகங்கள்

Photo

தத்துவம் நீக்கி மருள்நீக்கித் தானாக்கிப்
பொய்த்தவம் நீக்கிமெய்ப் போகத்துட் போக்கியே
மெய்த்த சுகமுண்டு விட்டுப் பரானந்தச்
சித்திய தாக்குஞ் சிவானந்தத் தேறலே. 

English Meaning:
All Tattvas and egoity past, Truth of self realised,
In truest joy immersed, of false penances void,
Rid of worldly lure, drunk full of Heavenly Bliss,
This indeed is Siddhi true and Sivananda unalloyed.
Tamil Meaning:
மேல் பலவிடத்தும் சொல்லிவந்த சிவானந்த மாகிய தேன், உயிர், நிலமுதல் நாதம் ஈறாகிய தத்துவங்களே தானாய்த் தன்னை அறியாது நிற்கும் நிலையே முதற்கண் நீக்கி, அதன்பின்னர், தன்னைச் சடமாகிய தத்துவங்களின் வேறாகக் கண்ட உயிர் `யான் சித்தாகிய பிரமமே` என மயங்கும் மயக்கத்தையும் போக்கிச் சிவமாகச் செய்து, காமியத்தவங்களைக் கைவிடப்பண்ணி, இன்பத்தைத் துய்ப் பதாகிய அவ்வுயிர் இன்பத்தைக் கொடுப்பதாகிய சிவத்தின்பால் சென்று அடங்கி இன்புற வைத்து உடம்பு உள்ள துணையும் நிற்பதாகிய இவ்வுலகத்தின் இன்ப துன்ப நுகர்ச்சியை உடல் ஊழாக நுகர்ந்து கழித்து, உடம்பு நீங்கிய பின்னர்ப் பேரா இன்பப் பெருவாழ்வாகிய பரமுத்தியைத் தலைப்படச் செய்யும்.
Special Remark:
`ஆதலின், ஏனைநெறிகளை விடுத்து அத்தேனைத் தரும் நெறியாகிய சிவநெறியைப் பற்றிப் பயனடைதல் சமயிகள் பலரும் செய்யத்தக்கது` என்பது குறிப்பெச்சம். வாம மதத்தின் இழிபுணர்த்துவார், ஏனை மதங்களின் சிறப்பின்மையும் உடன் கூறினார். போகம் தருவதனை, `போகம்` என்றார். மெய்த்த - மெய்யின் கண்ணதான.
இதனால், சிவநெறியது சிறப்புக் கூறும் முகத்தால் பிறநெறிகளது தாழ்வு கூறிக் கள்ளுண்ணும் வாமம் முதலிய மதங்கள் கடியப்பட்டன.