ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 27. கள்ளுண்ணாமை

பதிகங்கள்

Photo

காமமும் கள்ளுங் கலதிகட் கேயாகும்
மாமல முஞ்சம யத்துள் மயலுறும்
போமதி யாகும் புனிதன் இணையடி
ஓமய ஆனந்தத் தேறல் உணர்வுண்டே. 

English Meaning:
Lust and drink, fit for the wicked are they;
In ritual unholy they drink and lose the senses
But the wise drink the nectar streaming from His feet,
Which destroys egoism and bigotry.
Tamil Meaning:
காமக் களிப்பும், கள்ளுக் களிப்பும் கீழ் மக்கட்கே உரியனவாம். அதனால், அவற்றைச் சிறப்பித்துச் சொல்கின்ற, அறியா மையும் மயக்க உணர்வும் பொருந்திய சமயத்தில் நிற்பவர்க்கு அறிவு அழிவதேயாகும். தூயோனாகிய சிவபெருமானது திருவடியி னின்றும் உண்டாகின்ற, மாசற்ற, நிறைந்த இன்பத் தேனில், அறிவு நிலைபெற்று நிற்கும்.
Special Remark:
என்றது, ``காமம், கள் என்பவற்றிலும் சுத்த அதீத நிலையிலும் அறிவு நிகழாமை ஒன்றே யாயினும், காமத்திலும், கள்ளிலும் உண்டாகும் இன்பம் அறிவு அழிதலால் யாதும் அறியாது கிடக்கும் துன்பநிலையையே இன்பநிலையென மயங்கும் மயக்கமே. அதீத நிலையில் உண்டாகும் இன்பம் ஞேயப் பொருளையொழிந்த பிறவற்றை அறியாது அதனையே அறிந்து நிற்றலாகிய உண்மை இன்பமாம்` என்றவாறு.
மா மலம் - ஆணவம். `மயலும்` என உம்மை விரித்து, `மயலும் உறும் சமயத்துள் மதி போவதாகும்` என மாற்றிக் கொள்க. `இணையடி ஆனந்தத் தேறல்` என இயையும். ஓ - ஓவுதல்; நீங்குதல். மயம் - நிறைவு. `தேறலின்கண்` என உருபு விரிக்க. கள்ளினை விலக்குவார், ஒப்புமை பற்றிக் காமத்தையும் விலக்கினார்.