ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 27. கள்ளுண்ணாமை

பதிகங்கள்

Photo

சித்தம் உருக்கிச் சிவமாஞ் சமாதியில்
ஒத்த சிவானந்தத் தோவாத தேறலைச்
சுத்தமது வுண்ணச் சுவானந்தம் விட்டிடா
நித்தல் இருத்தல் கிடத்தல்கீழ்க் காலே. 

English Meaning:
In sweet rapture lost, soul-hydroptic for the Siva-Samadhi state,
The ever-sweet nectar of Sivananda — in the Bliss overflow;
On such nectar fed, you lose not the self-bliss pure;
For ever thus you sit and lie the Holy Feet below.
Tamil Meaning:
சித்த விருத்தியைக் கெடுத்துச் சிவமாய் நிற்கின்ற, அதீத நிலையில் விளைகின்ற சிவானந்தமாகிய தேனே தூய மதுவாம். அதனை உண்டால், இயற்கை இன்பம் நீங்காது நிற்கும். அஃதல்லாத பிற மதுக்களை நாள்தோறும் உண்டு மகிழ்தலும், செயலற்றுக் கிடத்தலும் பிறபொருட் கலப்பாலாகிய செயற்கை விளைவேயாம்.
Special Remark:
``சிவானந்தத்து`` என்பதில் அத்து, அல்வழிக்கண் வந்த சாரியை. ``செயற்கை விளைவு மயக்கமே யன்றி, உண்மை யன்று`` என்பது கருத்து. `கீழ்க்காலன` என்பவற்றை, ``கீழ்க்கால்`` என்றார். கீழ்க்காலன - கீழிடத்தன; இழிந்தன. எனவே, அவற்றை உண்டல் நன்மக்கட்கு ஆகா என்றதாயிற்று. செயற்கையை, `இழிந்தன` எனவே, `இயற்கை உயர்ந்தது` என்பது பெறப்பட்டது.
இதனால், கள்ளுண்டல் நன்மக்கட்கு ஆகாமை கூறப்பட்டது.