ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 5. பஞ்சாக்கரம் - தூலம்

பதிகங்கள்

Photo

பிரான் வைத்தஐந்தின் பெருமை உணராது
இராமாற்றம் செய்வார்கொல் ஏழை மனிதர்
பராமுற்றும் கீழொடு பல்வகை யாலும்
அராமுற்றும் சூழ்ந்த அகலிடம் தானே.

English Meaning:
Letters Five Alone Can Dispel Darkness

Knowing not the greatness
Of our Lord`s Letters Five,
Will they ever dispel their darkness?
Poor in spirit are they, (who think otherwise);
They will to the nether world consigned be
Surrounded by serpents of diverse species.
Tamil Meaning:
இறைவன் உயிர்கள் உய்தியின் பொருட்டு உண்டாக்கி வைத்துள்ள சாதனம் திருவைந்தெழுத்து மந்திரம். அதுவே அவனது பேராற்றலாகிய பொருட் சத்தியும், குண்டலினியாதல் பற்றி, `பாம்பு` என உருவகித்துக் கூறப்படும் சுத்த மாயையால் பலவகையாலும் வியாபிக்கப்பட்டு விளங்கும் அசுத்த மாயையும் பல புவனங்களும் ஆகும். ஆகவே, அதன் பெருமையை உணரமாட்டாத எளிய மக்கள் தங்கள் அஞ்ஞானமாகிய இருளைப் போக்கிக் கொள்ள வல்லவராவரோ!.
Special Remark:
`ஆகார்` என்பதாம். குண்டலினி - வளைந்திருப்பது; அஃதாவது, அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டு அவற்றைச் சூழ்ந்திருப்பது. அது சுத்த மாயையே அது நிவிர்த்தி முதலிய பஞ்ச கலைகளாய் விரிந்து அனைத்தையும் உள்ளடக்கி நிற்பதைக் குறிக்கவே சிவாலயங்களில் சிவலிங்கத்தின் மேல் பாம்பு ஒன்று ஐந்து தலைகளுடன் படம் எடுத்துக் கவிந்திருப்பதாக வைக்கப்படுகின்றது. இனிப் பூமியை அதன் அடியில் `ஆதிசேடன்` என்னும் பாம்பு தாங்குவ தாகக் கூறப்படுவதும், சுத்த மாயை எங்கும் வியாபித்துள்ளதைக் குறிப்பதே. திருமால் பாம்பணையிற்பள்ளி கொண்டிருப்பதாகக் கூறுவதும் பழமையாக இந்தக் கருத்து இந்நாட்டில் பலர்க்கும் பொதுவாய் இருந்ததைக் காட்டும். ஆயினும் பிற்காலத்தில் மாயோன் சமயம் சைவ தத்துவத்தை விட்டுச் சாங்கிய தத்துவத்தை ஏற்றுக் கொண்டது. இங்குப், ``பல்வகையாலும்`` என்றது, சுத்த மாயை நால்வகை வாக்குகளாயும், சிவம், சத்தி முதலிய சுத்த தத்துவங்களாயும், நிவிர்த்தி முதலிய பஞ்ச கலைகளாயும் விரிந்து நிற்றலை. இவற்றுள் நால்வகை வாக்குக்களே சிறப்புடையனவும் ஆதலின், `மந்திரங்களில் தலையானதாகிய திருவைந்தெழுத்து மந்திரமே அனைத்துமாய் உள்ளது` என்றும், இதனை உணராதார்க்கு ஞானம் உதியாது ஆதலின், `அவர் அஞ்ஞானத்தைப் போக்கிக் கொள்ள வல்லவராவரோ` என்றும் கூறினார். இரா - இரவு; இருள். பரா - பரா சத்தி. கீழ் - கீழது; அதோ மாயை; அசுத்த மாயை, பரா முற்றும், கீழொடு, அராப் பல்வகையாலும் சூழ்ந்த அகலிடம் முற்றும் தானே` என இயைக்க. தானே - அத்திருவைந்தெழுத்தே.
இவ்வாறு திருவைந்தெழுத்தின் பெருமையை பொதுப்படக் கூறி, தூல நிலை முடிக்கப்பட்டது.