ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 5. பஞ்சாக்கரம் - தூலம்

பதிகங்கள்

Photo

ஞாயிறு திங்கள் நவின்றெழு காலத்தில்
ஆயுறு மந்திரம் ஆரும் அறிகிலர்
சேயுறு கண்ணி திருவெழுத் தஞ்சையும்
வாயுற ஓதி வழுத்தலும் ஆமே.

English Meaning:
Chant Five Letters at Dawn and Dusk

When the Sun and the Moon rise,
They know not the mantra to chant and muse;
Well may they then chant full-mouthed
The Holy Mantra, Five-Lettered,
Wholesome, and praise the Lord;
—The Mantra that is so sacred to Sakti
Who with Siva stands.
Tamil Meaning:
`ஞாயிறும், திங்களும் எழுகின்ற காலை, மாலை என்னும் வேளைகளில் சிறப்பாகக் கணிக்கத் தக்க மந்திரம் இது` என்பதை அக்காலங்களில் மந்திரக் கணிப்புச் செய்வோரில் பெரும்பாலோர் அறிந்திலர். (ஆகவே அவர்கள் காயத்திரி மந்திரத்தையே அவ்வேளைகளில் கணிக்கின்றனர். ஆகவே) `சந்தியா தேவதை` எனப்படும் சத்திக்கு மிகவும் விருப்பத்தைத் தருவது திருவைந்தெழுத்து மந்திரமே என்பதை அறிந்து அதனை அக்காலங்களில் வாசகம் முதலிய மூவகையானும் ஓதுதலாகிய சிறப்பு அவர்கட்குக் கூடுமோ!.
Special Remark:
`கூடாது` என்பதாம். நவிலுதல் - முறைப்படி அமைதல். ஞாயிறு எழும் காலம் காலை வேளையாதல் வெளிப்படை. `திங்கள் எழும் காலம் ஞாயிறு மறையும் நேரம்` என்றே கொள்ளப்படும் இவையிரண்டும் கூறவே, இனம் பற்றி நண்பகலும் கொள்ளப்படும். இவையே முப்போதுகளாம் `சந்தியா காலம் எனப்படும் ஆசாரியராயினார் நள்ளிரவிலும் வழிபடுவர். அது சிறுபான்மை.
``செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்(கு)
அந்திஉள் மந்திரம் அஞ்செ ழுத்துமே``9
என்னும் ஞானசம்பந்தர் திருமொழியை இங்கு உடன் வைத்து உணர்க. ஆய் - ஆய்வு; முதனிலைத் தொழிற்பெயர். சேயுற் கண் - செவ்வரி பொருந்திய கண். மந்திரங்களைக் கணிக்கும் முறை `வாசகம், உபாஞ்சு மானதம்` என மூன்று என்பதை மேல், `வாயொடு கண்டம்`` எனப் போந்த மந்திர உரையிற் காண்க. ``வழுத்தலும்`` என்னும் உம்மை சிறப்பு, ஈற்றில் உள்ள ஏகாரம் எதிர்மறை வினாப்பொருட்டு.
``ஞாயிறு, திங்கள்`` என்பவற்றை வல இட உயிர்ப்புக்களாகக் கொண்டு, `அவற்றை முறையாக இயக்கித் திருவைந்தெழுத்தைக் கணிப்பினும், அம்ச மந்திரத்தைக் கணித்தலோடொப்பதே` என உரைத்து, ``ஊனில் உயிர்ப்பை`` எனத் தொடங்கும் ஞானசம்பந்தர் திருப்பாடலை மேறகோளாகக் காட்டுவர்.
இவ்விருபொருளையும் இம்மந்திரத்திற்குப் பொருளாகக் கொள்க.
[இதனை அடுத்துச் சில பதிப்புக்களில் காணப்படும் ``தெள்ளமு தூறச் சிவாய நம என்று`` என்னும் மந்திரம் அடுத்த அதிகாரத்தில் இருத்தற்குரியது.]