ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 5. பஞ்சாக்கரம் - தூலம்

பதிகங்கள்

Photo

அகாரம் முதலாக ஐம்பத்தொன் றாகி
உகாரம் முதலாக ஓங்கி உதித்து
மகார இறுதியாய் மாய்ந்துமாய்ந் தேறி
நகார முதலாகும் நந்திதன் நாமமே.

English Meaning:
Fifty Letters Became Fifty-One

With the letter ``A`` intoned in commencement,
The letters Fifty, Fifty-One became;
With letter ``U`` intoned high with letter ``A``,
And with letter ``M``, it (A&U&M as AUM) ended;
And again with letter ``N`` rising,
It became Nandi`s name ``Aum Nama Sivaya. ``
Tamil Meaning:
சிவன், ``சொல் இறந்து நின்ற தொன்மையன்`` ஆயினும் சொல்லாலன்றி உயிர்கள் அவனை உணர்தல் கூடாமை பற்றி அவன் சொல்வடிவான பல பெயர்களையும் உடையவன் ஆகின்றான். எல்லாப் பொருள்களும் பெயராலே அறியப்படுதலாலும் எல்லாப் பொருள்களிலும் சிவன் அவையேயாய்க் கலந்து நிற்றலாலும் ஒரு வகையில், எல்லாப் பெயர்களும் சிவன் பெயர்களேயாகின்றன. பெயர்கள் யாவும் எழுத்துக்களால் ஆனவை. `அவ் எழுத்துக்கள் ஐம்பத்தொன்று` எனப்படுகின்றன. அந்த எழுத்துக்கள் பிரணவ கலைகளாகிய அகார உகார மகாரங்களால் முறையே `தோற்றம், நிலை, இறுதி` என்பவற்றை அடைவனவாகச் சொல்லப்படுகின்றன. ஆகவே, அனைத்துப் பெயர்களும் தோன்றி அழிவன ஆகின்றன. இந்நிலையில் தோற்றமும் அழிவும் இல்லாத சிவ நாமம், நகாரத்தை முதலாக உடைய ஐந்தெழுத்தாதல் ஆவதாம்.
Special Remark:
எனவே, இந்த ஐந்தெழுத்துக்கள் ஐம்பத்தோர் அக்கரங்களுள் அடங்கி நிற்கின்ற அந்த எழுத்துக்கள் ஆகாது, வேறு எழுத்து என்பதாம். இது பற்றி, ``ஐந்து கலையில் அகராதி தன்னிலே`` என்ற மந்திரத்தை நோக்குக. மற்றும்,
``அஞ்செழுத்தீ தாகில் அழியும் எழுத் தாய்விடுமோ!
தஞ்ச அருடகுருவே சாற்று``
என்னும் உண்மை விளக்க அடிகளில் அமைந்த குறிப்பையும் உன்னுக. ஆதல் - தோன்றுதல். ஓங்கி உதித்தல் - நிலைத்து நிற்றல்.
``மாய்ந்து மாய்ந்து ஏறி`` என்றது, `பலவாய்த் தோன்றி மறைந்து பெயர்களாய் எண்ணிக்கை மிகுந்து` என்றபடி. இங்ஙனம் கூறியது பெயராயின பலவற்றையும் ``ஏறி`` என்பதன் பின் `முடிவாக` என்பது வருவிக்க. `முதலது` என்பதில் இறுதி நிலை தொகுத்தலாயிற்று.
இதனால், சிவ நாமமாகிய ஐந்தெழுத்துக்கள் ஏனை எழுத்துக்கள் பலவற்றில் சில ஆவன அல்ல` என்பது கூறப்பட்டது.