ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 5. பஞ்சாக்கரம் - தூலம்

பதிகங்கள்

Photo

குருவழி யாய குணங்களில் நின்று
கருவழி யாய கணக்கை அறுக்க
வருவழி மாள மறுக்கவல் லார்கட்
கருள்வழி காட்டுவ தஞ்செழுத் தாமே.

English Meaning:
The Five Letters Will Close the Gateway to Birth

Take to the Way the Guru showed,
And blot out the reckoning of births;
To them who seek to close the birth`s cyclic way
The Five-Letters alone show the Grace-Way.
Tamil Meaning:
சிவகுரு உபதேசித்த மொழி வழியில் நின்று, பிறப்பிற்கு ஏதுவான வழியையே கூறும் சமய நூல்களைக் கைவிடவும், மற்றும் பிறவி வரும் வழிகெட்டுப் போகும்படி அதனைப் போக்கவும் வன்மை பெற வேண்டுவார்க்கு அவ்வன்மையைத் தருவதாகிய திருவருளாகிய வழியைக் காட்டுவது திருவைந்தெழுத்து மந்திரமே யாகும்.
Special Remark:
குரு வழி - குரு காட்டிய வழி. அஃது உபதேச வடிவின தாம். குணம் - நற்பண்பு; என்றது நல்லொழுக்கத்தை. குணத்ததைத் தருவதனை, ``குணம்`` என்றார். `நின்று அறுக்கவும், மறுக்கவும் வல்லார்` என்க. கணக்கு - நூல். ``வல்லார்`` என்றது, `வன்மையை வேண்டுவார்` என அக்காரணத்தின்மேல் நின்றது. அருள் வழி - அருளாகிய வழி. `அதனைக் காட்டுவது அஞ்செழுத்து` எனவே, பிறவெல்லாம் அருள் அல்லாத மருள் வழியையே காட்டுதல் பெறப்படும்.
இதனால், `திருவருளைப் பற்றச்செய்வது திருவைந் தெழுத்தே` என்பது கூறப்பட்டது.