ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 31. அட்ட தள கமல முக்குண அவத்தை

பதிகங்கள்

Photo

பல்லூழி பண்பிற் பகலோன் இறையவன்
நல்லூழி ஐந்தினுள் ளேநின்ற ஊழிகள்
செல்லூழி அண்டத்துச் சென்றவண் ஊழியுள்
அவ்வூழி உச்சியுள் ஒன்றின் பகவனே.

English Meaning:
God is Timeless Eternity

He lasts through aeons countless;
He is the Sun; He is the Lord;
Within the five Major Aeons
Were many aeons minor
The universe through several aeons passed;
In the aeon above aeons countless,
Was (God) Bhagavan, unique.
Tamil Meaning:
முதற்கடவுளாவான் உலகிற்குப் பலவகையான ஊழிகளைப் பகுத்து வைத்துத்தான் அவற்றில் அகப்படாது நிற்பவன். அங்ஙனம் பகுக்கப்பட்ட ஊழிகள் பெரும்பான்மையாக ஐந்தாகும். அவை நிவிர்த்திகலை யூழி முதலாக, சாந்தியதீதைகலை ஊழி ஈறானவையாம். அவற்றில் ஒன்றிலும் உள்ளாய் நிகழும் ஊழிகள் பல. ஒவ்வோர் ஊழியையும் கடந்து அனைத்து ஊழிகளும் முடிந்த பின்பும் அவற்றில் மாயையில் அனைத்து உலகங்களும் ஒடுங்கவும் தான் ஒடுங்காது மேல் நிற்பவன் எவனோ, அவனே முழுமுதற்கடவுள்.
Special Remark:
`அத்தகையோன் பரம சிவனே` என்பது கருத்து. அதனால், `ஏனையோர் பலரும் அவனால் தோற்றி ஒடுக்கப்படும் உயிர் வருக்கத்தினரே` என்பதும் அருத்தாபத்தியால் பெறப்பட்டது. பகல் - பகுதல்; பகுத்தல். பகலோன் - பகுத்தலை உடையவன். நின்ற - நின்றன. இரண்டாம் அடியீற்றில் `பல` என்பது வருவிக்க. `செல்லூழிதோறும் அண்டத்துச்சென்றவன்` என்க. `அண்டம்` என்பது, `அப்பால்` என்னும் பொருட்டு. ``உச்சியுள்`` என்பதும் அது ஊழியுள் அவ்வூழி - எல்லா ஊழிகளிலும் முடிவான ஊழி. ஒன்றின் - பொருந்தியிருப்பின். `அவன் பகவனாம்` என முடிக்க. ஈற்றடி இன எதுகை.
இதனால், இதய கலம வழிபாடு சைவ வழிபாடாக நிகழ்தலே சிறப்புடையதாதல், அதற்குக் காரணம் கூறும் முகத்தால் வலியுறுத்தப்பட்டது.