ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 31. அட்ட தள கமல முக்குண அவத்தை

பதிகங்கள்

Photo

மொட்டலர் தாமரை மூன்றுள மூன்றினும்
விட்டலர் கின்றனன் சோதி விரியிதழ்
எட்டல ருள்ளேர் பிரண்டல ருள்ளுறில்
பட்டலர் கின்றதோர் பண்டம் கனாவே

English Meaning:
How the Eight Petalled Lotus Opens

Three the lotus buds there;
Into the three He sends His rays
That Light Spreading,
The eight-petalled bloom within opens;
Into them
If the rays of Petals Two (Ajna) penetrates,
This body, into a (heavenly) dream blossoms.
Tamil Meaning:
அரும்பாய் இருந்து அலர்த்த அலர்கின்ற தாமரை மலர்கள் உடலினுள்ளே ஒன்றல்ல; மூன்று உள்ளன. அந்த மூன்றிலுமே ஒளி வடிவான இறைவன் விளங்குகின்றான். எனினும், மேற்கூறிய எட்டிதழ்த் தாமரையிலே நின்றுவிடாமல் ஏறிச் சென்று இரண்டிதழ்த் தாமரையை அடைந்து அவனைத் தரிசித்தால், பிறந்து வளர்கின்ற உடம்பு கனவுக் காட்சியாய்விடும்.
Special Remark:
``மொட்டு அலர்கின்ற`` என்ற விதப்பால், அலர்த்த அலர்தல் பெறப்பட்டது. அலர்த்துதல் பிராணாயாமத்தால். மூன்று தாமரைகளாவன, மேல் ஆதாரங்களாகிய, `அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை` என்பன எட்டிதழ்த் தாமரை அனாகதமே. கீழ் ஆதாரங்களில் வேறு கடவுளர் இருத்தலின் அவற்றைக் கூறாது, இம்மூன்று ஆதாரங்களை மட்டுமே கூறினார். இவற்றில் சிவன் `உருத்திரன், மகேசுரன், சதாசிவன்` என இருப்பன். அதனால், `உருத்திரனிடத்திலே நின்று விடாமல், சதாசிவனை அடைக` என்றார். ஆதார யோகத்தின் பயன் விளைவது அவ்விடமேயாகும் அனாகதம் பூசைத்தானமாக ஆஞ்ஞையே தியானத் தானமாம். ஏற்பு - எழுந்து பண்டம் - உடம்பு. இது பின்னர் வருதலின், முன்னர் ``மூன்றுள`` என்றது இதனுள்ளேயாயிற்று. கனவுக் காட்சியாதலாவது, `கனவு போல நிலையாது` என்னும் உணர்வு மிகுதல்.
இதனால், `ஆதார யோகம் யாவும் ஒரு பெற்றிப்பட்டன அல்ல; மேலையாதார யோகமே சிவ யோகமாய்ப் பயன் தரும்` என்பது கூறப்பட்டது.