ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 31. அட்ட தள கமல முக்குண அவத்தை

பதிகங்கள்

Photo

ஏழும் சகலம் இயம்பும் கடந்தெட்டில்
வாழும் பரம்ஒன்(று) அதுகடந் தொன்பதில்
ஊழி பராபரம் ஊங்கியை பத்தினில்
தாழ்வு அது ஆன தனித்தன்மை தானே.

English Meaning:
Centres Beyond Seventh are Formless States

The Centres Seven are of Form (Svarupa) possessed;
Transcend them;
And beyond in Eighth is Param;
In Ninth is Paraparam, that is Void;
The exalted Tenth is State of Oneness
Where Anava is finally shed.
Tamil Meaning:
வைதிக முறையில் வழிபடினும், இதய கமலத்தின் எட்டிதழ்களில் கிழக்கு முதலாகத் தொடங்கி வலமாக ஏழ் எண்ணி ஏழாவதாகிய வட இதழ் ஈறாக உள்ள இதழ்களில் உள்ளவர்களாக மேற்சொல்லப்பட்ட திசைக் காவலர்களைச் சகலவருக்கத்து ஆன்ம வர்க்கத்தவராகவும், அடுத்த வடகீழ் இதழில் உள்ள ஈசானனை அவரின் மேம்பட்ட பிரளயாகல உருத்திரனாவும், எட்டையும் கடந்து மேலாக ஓங்கி நிற்கும் உயர்புற இதழில் சீகண்ட உருத்திரரை வைத்துச் சிவனாகவும், கீழ்நோக்கித் தூங்கும் கீழ்ப்புற இதழில் ஆதார சத்தியை வைத்து அச்சத்தியாகவும் பாவித்து வழி படின் சிறப்புடைய சைவ வழிபாடாக அமையும்.
Special Remark:
``ஏழ்`` என்று ஏழ் இதழ்களின் உள்ள தேவதைகளைக் குறித்தது. `சகலமாக இயம்பும்` என ஆக்கம் வருவிக்க. `இயம்பும்` - இயம்பப்படும். `வாழும் ஒன்று பரம்` என மாற்றிக்கொள்க. ``பரம்`` என்பது, `மேலானது` என்னும் அளவாய் நின்றது. ஊழி பராபரம் அயன், மால் இவர்களது ஊழிலும் அழியாது நிற்கும் சீகண்ட உருத்திரர். தாழ்வு - கீழ் உள்ளது; ஆதார சத்தி. மேல், ``சுருங்கிய தண்டின் சுழுனையினூடே`` என்றமையால் இம்முறைக்கு மூலா தாரத்தில் உள்ள குண்டலிசத்தியே தாமரையின் கிழங்காகும், இதய கமல வழிபாடு சைவாகமங்களில் சொல்லப்பட்ட சைவமுறை வேறாதலையறிக. தனித்தன்மை - சிறப்புத் தன்மை; அது சிவ வழிபாட்டுத் தன்மையாம்.
இதனால், வைதிகத்தில் சைவமாம் வகை சொல்லப்பட்டது. அனைத்துத்தேவர்களையும் ஒரு நிகராகப் பரமாகக் கருதுவது தனி வைதிகம் என உணர்க.