ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 6. ஞான லிங்கம்

பதிகங்கள்

Photo

சத்தி சிவன்விளை யாட்டாம் உயிர்ஆகில்
ஒத்த இருமாயா கூட்டத் திடைஊட்டிச்
சுத்தம தாகும் துரியம் பிரிவித்துச்
சித்தம் புகுந்து சிவம்அகம் ஆக்குமே.

English Meaning:
The Play of Sakti—Sakti activates Jiva

Into the Maya Group — Suddha and Asuddha
They induct the Jiva;
From Pure Turiya State disentangling him,
They his thoughts enter;
And inside him, Siva His habitation takes;
—This the play of Sakti-Siva.
Tamil Meaning:
`உயிரின் இருப்பு, சத்தயோடு கூடிய சிவனது விளையாட்டே` என்றால், அச்சிவன் அவ்வுயிரை யாதாக்குவான் எனில், ஆணவத்தைப் போகக்தற்கண் தம்மில் ஒரு தன்மைப்பட்ட, `சுத்தம், அசுத்தம்` என்னும் இருமாயையால் ஆகிய கருவிக் கூட்டத்துள் அவ்வுயிரை முதற்கண் புகுவித்து அந்நிலையில் அவற்றின் வினைகளை அவை நுகரச் செய்து, அக்கருவிகள் கூடுதல் குறைதல்களால் உளவாகின்ற கேவல ஐந்தவத்தை சகல ஐந்தவத்தை கட்குப் பின் திருவருளால் உளவாகின்ற சுத்த ஐந்தவத்தையை அடை வித்து இறுதியாகத் துரியத்தையும் நீக்கித் துரியாதீதத்தில் சேர்த்து, அங்ஙனம் சேர்க்கப்பட்ட அந்நிலையில் அதன் அறிவினிடமாகத் தான் விளங்கி, அதனாலே, தனது இன்ப வெள்ளமே அவ்வுயிர்க்கு என்றும் உறைவிடமாகச் செய்வான்.
Special Remark:
`சத்தியோடு கூடிய சிவன்` என்றதனால், ஆதிசிவன்` என்பது பெறப்பட்டது. உயிரினது நிலைபேற்றை `உயிர்` என்றது ஆகு பெயர். விளையாட்டால் ஆவதனை, ``விளையாட்டு`` எனக் காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. ``ஆகில்`` என்னும் `செயின்` என் எச்சம் தெளிவின்கண் வந்தது. `சுத்தம், அசுத்தம்` என்பவற்றால் தம்மில் வேறுபாடு உடையவேனும், ஆணவத்தை நீக்குதற்கண் ஒரு தன்மைய ஆதல் பற்றி இரு மாயைகளையும் ``ஒத்த இரு மாயை`` என்றார். மாயை, ஆகுபெயராய் அதன் காரியத்தை உணர்த்திற்று. ``இடை`` என்பதன்பின், `புகுவித்து` என்பது எஞ்சிநின்றது. இறுதி யாதல் பற்றி, சுத்த துரியத்தினின்றும் பிரிவித்தலை மட்டுமே கூறினாராயினும், அதற்கு முன் நிகழ்வனவாகிய அனைத்து அவத்தைகளினின்றும் பிரிவித்தல் ஆற்றலால் விளங்கிற்று. அறிவை, `சித்தம்` என்றல் வழக்கு. `சிவம்` என்பது, இங்கு, `இன்பம்` என்னும் பொருளதாய் நின்றது. `சிவத்தை` என இரண்டாவது விரிக்க.
இதனால், மேலை மந்திரத்தில் ``முறைசொல்லின்`` எனக் குறிக்கப்பட்ட `முறை` இனிது விளக்கப்பட்டது.