ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 6. ஞான லிங்கம்

பதிகங்கள்

Photo

நாலான கீழ உருவம் நடுநிற்க
மேலான நான்கும் அருவம் மிகநாப்பண்
நாலான ஒன்றும் அருஉரு நண்ணலால்
பாலாம் இவையாம் பரசிவன் தனே.

English Meaning:
Sadasiva is Form-Formless

In the Centre He is, Sadasiva,
The Four below are the Formed,
(Brahma, Vishnu, Rudra, Mahesa)
The Four above are the Formless
(Bindu, Nada, Sakti, Siva)
Thus are His parts
He, the Parasiva.
Tamil Meaning:
கீழும், மேலும் நான்கு நான்கு திருமேனிகளாய் உள்ள அவற்றிற்கு மிக நடுவிலே உள்ள ஒரு திருமேனி மட்டும் அருவுருவமும், அஃதொழிய அதற்குக் கீழ் உள்ள திருமேனிகள் நான்கும் உருவமும், மேல் உள்ள திருமேனிகள் நான்கு அருவமும் ஆக இவ்வாறு பொருந்துதலால், இவையாய் நிற்கின்ற பரமசிவன் ஒருவனேயாயினும் ஒன்பது பேதங்களாய் நிற்பன்.
Special Remark:
இவற்றை `நவந்தரு பேதம்` - என்பர். மூன்றாம் அடியில் ``நாலான`` என்றது, முன்னர், கீழே. மேல் - எனக் குறித்த இடம் ஒவ்வொன்றிலும் நாலான` - என்றதாம். அதனை முதற்கண் எடுத்து, நாலானவற்றின் மிகநாப்பண் ஒன்றும் அருவுரு, என இயைத்துரைத்து வைத்து, அதன்பின் ``நடுநிற்க`` என்பதனை வைத்து, அதன்பின் முதற்றொட்டு உரை்க. நடுண் நிற்கும் திருமேனி, ``நடு`` எனப்பட்டது. ``நிற்க`` என்றது, `ஒழிய` என்றபடி ``நண்ணலால்`` என்பதற்குமுன், `இவ்வாறு` என்பது எஞ்சி நின்றது, ``நாலான கீழ், மேலான நான்கும், மிகநாப்பண் ஒன்றும்`` என்றதனானே `ஒன்பது` என்னும் தொகை பெறப்படுதலால் வாளா, ``பாலாம்`` என்றார். `இவையாம் பரசிவன்தான் ஒருவனே` பாலாம்` என இயைத்துக் கொள்க.
மேல் நான்கு, `சிவம், சத்தி, நாதம், விந்து` என்பன. நாப்பண் ஒன்று சதாசிவ மூர்த்தம். கீழ்நான்கு, `மகேசுரன், உருத்திரன், மால், அயன்` - எனப்படும் மூர்த்தங்கள். இவற்றின் இயல்பு சிவஞான சித்தியார் இரண்டாம் சூத்திரத்தில் கூறுமாற்றாண் அறிக.
உருவத் திருமேனிகளை இவ்வாற்றால் உணரும் ஞானமே சரியை` என்றும், அருவுருவத் திருமேனியை இவ்வாறு உணரும், ஞானமே `கிரியை` என்றும், அருவத் திருமேனிகளை இவ்வாறு உணரும் ஞானமே `யோகம்` என்றும், `இம்மூவகைத் திருமேனிகளுள் யாதொன்றும் இன்றி அறிவுத் திருமேனியே பரசிவம்` - என உணரும் ஞானமே `ஞானம்` என்றும் சொல்லப்படுகின்றன. `இந்த நான்கும் ஞானத்தின் அரும்பு, மலர், காய், கனிபோலும் நிலையவாம்` என்பதை,
``விரும்பும் சரியைமுதல் மெய்ஞ்ஞானம் நான்கும்
அரும்புமலர் காய்கனிபோ லன்றோ பராபரமே``
என்னும் தாயுமானவர் பாடலால் அறியலாம்.
இதனால், ஞான லிங்கங்கள் நால்வகையின ஆதலும், அவற்றின் படிநிலை உயர்வுகளும் ஞானத்தால் உணரப்படுகின்ற ஞேயங்களைக் கூறும்முகத்தால் கூறியவாறு.