ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 7. அருளுடைமையின் ஞானம் வருதல்

பதிகங்கள்

Photo

காயத்தேர் ஏறி மனப்பாகன் கைகூட்ட
மாயத்தேர் ஏறி மயங்கும் அவை உணர்
நேயத்தேர் ஏறி நிமலன் அருள்பெற்றால்
ஆயத்தேர் ஏறி அவன்இவன் ஆகுமே.

English Meaning:
Grace Unites Soul in God

They mount the Body-Chariot
And Mind, the Charioteer takes the rein;
It is Illusion`s-Chariot
That strange fantasies produces;
And they realize it,
And mount the Chariot of Love instead
And receive Grace of the Pure One,
They shall sure be drawn
In the triumphant Chariot of Unity
And be one in God, obliterating I and He.
Tamil Meaning:
`உடம்பு` என்னும் நிலையில்லாத தேரின்மேல் ஏறி, மனமாகிய பாகன் தன் கைவன்மையைப் பொருத்தி, கண்ட இடங்களில் செல்லச் செலுத்துதலினால் வழியறியாது மயங்குகின்ற உயிர்கள் சிறிதே உணர்வு பெற்றுச் சிவன்மேற் செல்லும் அன்பாகிய தேரில் ஏறிச்சென்று அவனது அருளைப்பெற்றால், அங்ஙனம் அதனைப் பெற்றவரது குழாமாகிய தேரின்மேல் ஏறிச் சீவன் சிவனை அடைந்து அவனாய் விடும்.
Special Remark:
காயத்தைத் தேராக உருவகிக்கின்றவர் அதன் இயல்பை உணர்த்தவேண்டி அதனை ``மாயத் தேர்`` என்றும் கூறினார். கை, ஆகுபெயர். அன்றி, `கைகூட்டல்` என்பது, கையைப் பொருத்தி ஓட்டுதலாகிய காரியத்தைக் குறித்தது என்றலுமாம். ``உணர்`` என்னும் முதனிலைத் தொழிற் பெயரில் `உணர்வால்` என உருபுவிரிக்க. `உணர்ந்த பொருளிலன்றி அன்பு நிகழாது` என்பதனை உணர்த்த, `உணர்வால் நேயத்தேர் ஏறி` என்றார். உணர்வு சிவனை உணர்தற்கு இருவினையொப்பில் நிகழும் சத்திநிபாதம் காரணமாம். ``நல்லினத்தி னூஉங்கும் துணையில்லை``l என இன்பத்தை எய்துதற்கு நல்லினம் சாதனமாகக் கூறலின், அதனையும் தேராக உருவகித்தார், ``அவன் இவன் ஆமே` என்றதனை, `இவன் அவன் ஆமே` என மாற்றியுரைக்க. இது நிமலன் அருள் பெற்றதன் பயனை விளக்குவதாய் வேறு முடிபாகலின், திணை வழுவும், பால் வழுவும் ஆகாமையறிக.
இதனால், `சிவனருளைப் பெற்றுச் சிவமாவதற்கு முதற்கண் அன்பு வேண்டும்` என்பது கூறப்பட்டது.