ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 7. அருளுடைமையின் ஞானம் வருதல்

பதிகங்கள்

Photo

புண்ணியன் எந்தை புனிதன் இணையடி
நண்ணி விளக்கென ஞானம் விளைந்தது
மண்ணவ ராவதும் வானவ ராவதும்
அண்ணல் இறைவன் அருள்பெற்ற போதே.

English Meaning:
Grace Decides Your Birth To-Be

The Holy One, the Immaculate One, My Father!
I sought His matchless Feet
And lo! Jnana shone forth as a beacon light;
You remain an earthly being
Or a Heavenly Being become;
All, as my Lord`s Grace dawns.
Tamil Meaning:
அற வடிவினனும், எம் தந்தையுமாகிய சிவபிரானது இரு திருவடிகளை அடைந்ததனாலே, இருளை நீக்கி ஒளிரும் விளக்குப்போல்வதாகிய ஞானம்எனக்கு உண்டாயிற்று. இல்லையேல் உண்டாக மாட்டாது. யாவராயினும் மக்களாய்ப் பிறப்பதோ அல்லது தேவராய்ப் பிறப்பதோ சிவனருள் வாய்க்கப் பெற்றபோதேயாம்.
Special Remark:
`அவ்வாறான பொழுது ஞானியாதல் அவனது அருளின்றி எங்ஙனம் ஆகும்` என்பது கருத்து. `சிவன்` என்னும் சொல்தரும் பொருள்களுள், `தூயதன்மையன்* என்பதும் ஒன்றாக லால், ``புனிதன்`` என்றது `சிவன்` என்றவாறு. ``நண்ணி`` என்னும் செய்தெனெச்சத்தை, `நண்ண` எனச் செயவெனெச்சமாகத் திரித்துக் கொள்க. விளக்கு, பயன் பற்றிவந்த உவமை. பிறப்புக்களில் மக்கட் பிறப்பும், தெய்வப் பிறப்பும் சிறந்தனவாகலின் அவற்றை அடைதலையே எடுத்துக் கூறினார்.
இதனால், `உயர்வு யாதும் சிவனருள் இன்றி ஆகாது` என்பது கூறும் முகத்தால் ஞானம் அவனருள் இன்றி வாராமை வலியுறுத்தப் பட்டது.