ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 7. அருளுடைமையின் ஞானம் வருதல்

பதிகங்கள்

Photo

தமிழ்மண் டலம்ஐந்தும் தாவிய ஞானம்
உமிழ்வது போல உலகர் திரிவார்
அவிழும் மனமும் ஆதி யருளும்
தமிழ்மண் டலம்ஐந்தும் தத்துவ மாமே.

English Meaning:
Jnana is Beyond Five Siva Tattvas

They go about the world
Exuding Jnana that is beyond Tamil mandalas; Five
Tamil mandalas are but Siva Tattvas;
There it is the blossoming of mind
And attainment of Lord`s Jnana.
Tamil Meaning:
`சேர மண்டலம், சோழமண்டலம், பாண்டி மண்டலம், கொங்கு மண்டலம், தொண்டை மண்டலம் என்னும் தமிழ்வழங்கும் மண்டலம் ஐந்திலும், மிகப் பரந்த ஞானத்தை உணர்த்துவார்போலப் பிற நாட்டவர் புகுந்து திரிவார்கள். ஆயினும், அம்மண்டலம் ஐந்திலும், `உயிர்களின் அன்பு, இறைவனது அருள்` என்னும் அவ்இரண்டுமே பொருளாக விளங்குகின்றன.
Special Remark:
`ஆதலின், அவற்றை அறியாத பிறர் தமிழ் மண்டலத் தின் உள்ளார்க்கு உணர்த்தும் சீரிய ஞானம் யாது மில்லை` என்றபடி, பிறநாட்டில் காசுமீரம் போன்ற சிறிதிடத்தில் சைவ சித்தாந்தம் ஓரளவு வழங்கப்படுகின்றதாயினும், அது தொன்று தொட்டு இன்றும் இனிதே விளக்கமுற்று நிற்பது தமிழ்நாட்டிலேயாகலானும், சைவ சித்தாந்தம், உயிர்கள் தம் பரிபாகத்திற்கு ஏற்பச் செய்யும் அன்பிற்குத் தகச் சிவன் அவைகள் மாட்டு அருளுடையனாய் ஞானத்தை வழங் குவன்` என்பதை முடிநிலைப் பொருளாகக் கூறுத லானும், `அதனை யறியாத பிறநாட்டவர் தமிழ் நாட்டவர்க்கு உணர்த்த இருக்கும் தத்துவம் யாதுளது? என்றார். ``வண்புகழ் மூவர் தண் பொழில் வரைப்பு`` l என்பது முதலிய பண்டை நிலைக்குப் பின் நாயனார் காலத்தில் தமிழ் மண்டலம் ஐந்தாயிற்று என்க.
இரண்டிடத்தும் ``ஐந்தும்`` என்பதில் ஐந்தன்கண்ணும் என உருபு விரித்து, ``திரிவார்`` என்பதனோடும் ``ஆம்`` என்பதனோடும் முடிக்க. அறிவு - ஞானம்; அஃது அருளேயாதல் அறிக. `ஆதி அருளும்` என்றே பாடம் ஓதுதலுமாம் ஈற்றடியையும், `தமிழ்மண் டலம் ஐந்தின் தத்துவ மாமே` ஓதுதல் சிறக்கும்.
இதனால், `இவ் அதிகாரப் பொருள் தமிழ் நாட்டிலே உள்ள இணையிலா உயர்பொருள்` என்பது கூறப்பட்டது.