ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 7. அருளுடைமையின் ஞானம் வருதல்

பதிகங்கள்

Photo

புண்ணியம் பாவம் இரண்டுள பூமியில்
நண்ணும் பொழுதறி வார்சில ஞானிகள்
எண்ணி இரண்டையும் வேரறுத் தப்புறத்
தண்ணல் இருந்திடம் ஆய்துகொள் ளீரே.

English Meaning:
Jnana is Knowledge of Good and Evil

Good and evil, they are two in this world
As they seek God, some Jnanis know them;
As you cognize them two and uproot them
Then shall you perceive Lord`s Abode Beyond.
Tamil Meaning:
உலக வாழ்க்கையில் `நல்வினை, தீவினை` என்று இருவினைகளின் தோற்றமும், பயனுமே உள்ளன. அத்தோற்றம், பயன் என்பவற்றை அவை நிகழுங்காலத்தே தெளிய அறிபவர் சில ஞானியரே, அதனால், நீவிர் அந்த ஞானியர் வழிநின்று அவற்றைக் கருதியுணர்ந்து, அவ்வினைகளையும் அடியோடு போக்கி, அவற் றிற்கு அப்பால் இறைவன் இருக்கின்ற இடத்தை ஆராய்ந்தறியுங்கள்.
Special Remark:
`அப்பொழுது ஞானம் வரும்` என்பது குறிப்பெச்சம். [``புண்ணிய பாவம்`` எனத் தொகையாக ஓதுதல் பாடமாகாமை அறிக.] `வினை உளதாய்ப் பயன் தருதலை உலகர் உணரார்; ஆதலின், நீவிர் உலகர் வழியிற் செல்லாது, அறிவர் வழியிற் செல்க` என்பார், ``நண்ணும் பொழுதறிவார் சில ஞானிகள்`` என்றார். ``பொழு தறிவார்`` என்றது, `பொழுதிடத்தே நேர்பட அறிவார்` என்றவாறு.
``நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம்`` 3
என்றவாறு, உலகியல் வினைவழிப்பட்டதேயாக, மெய்ந்நெறி அவ் வினை வழிக்கு அப்பாற்பட்டதாகலின் அதனை, ``அப்புறத்து அண்ணல் இருந்திடம்`` எனவும் ``அவ்விடமாவது அருளேயாகலின், அதனை ஆய்ந்துணர்ந்து அடைய ஞானம் வரும் என்பார், ஆய்ந்து கொளீரே`` எனவும் கூறினார். `இருந்த` என்பதன் ஈற்றகரம் தொகுத்தல் பெற்றது. `இருப்பிடம்` என்பதும் பாடம். வினையை அடி யோடு அறுத்தலாவது. அதற்கு முதலாகிய விருப்பு வெறுப்புக்களை விடுதல். விருப்பு நல்வினைக்கண்ணும், வெறுப்பு, தீவினைக்கண்ணும் நிகழ்வன. அவ்விரண்டையும் விடுத்து இரண்டன் கண்ணும் ஒப்ப நிற்றலையே `இருவினை ஒப்பு` என்பர், இதனை,
``ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவர்``l என்றாற் போலும் இயல்புகளால் விளக்குவர். இருவினையொப்பின்றி இறைவனது அருளைப் பெறுதல் கூடாமை யின், ``இரண்டையும் வேரறுத்து - அண்ணல் இருந்திடம் ஆய்ந்து கொளீரே`` என்றார்.
இதனால், அருளுடைமை வருமாறு கூறப்பட்டது.