ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 4.துறவு

பதிகங்கள்

Photo

நாகமும் ஒன்று படம் ஐந்து நாலது
போகம் முட் புற்றில் பொருந்தி நிறைந்தது
ஆகம் இரண்டும் படம்விரித் தாட்டொழிந்
தேகப் படஞ்செய் துடம்பிட மாமே.

English Meaning:
When Distractions of Senses Cease

One the serpent (Jiva), Five its hoods (Senses)
The Four (Antakaranas) fill the thorny hole of enjoyment;
In its twain body, subtle and gross
It raised its hoods and danced away;
Then into a single hood it merged (Kundalini)
Into the very body within.
Tamil Meaning:
(இது பிசிச்செய்யுள்) நாகம், உயிர் ஐந்துபடம், ஐம் பொறிகள். போகம் - உணவு. நான்கு உணவு. அந்தக் கரணம் நான் கினும் நால்வகையாய்ப் புலப்படும் பொருள், முட்புற்று, துன்பம் நிறைந்த உடல். நிறைந்தது, மனநிறைவுபெற்றிருந்தது. ஆகம் - உடம்பு. பாம்பு தோலுரிப்பது ஆதலால், இரண்டுடம்பு உடையதாம். அவை இங்குத் தூலமும், சூக்குமமுமாகிய இரண்டுடம்புகளைக் குறித்தன. அவை படம்விரித்து ஆடல், ஐம்பொறிகளின்வழி ஐம்புலன் களையும் பொதுப்படக் கவர்தலும், பின் சிறப்பு வகையில் உணர்ந்து திரிபு எய்தலுமாம். அவ் ஆடலை ஒழிதல் ஐம்புல அவாவை அறுத் தலாம். ஐந்து படங்கள் இன்றி ஒருபடத்தையே எடுத்தலாவது, மெய்ப் பொருள் ஒன்றையே நோக்குதல். உடம்பே இடமாதல் - புற்றைவிட்டு நீங்கி அருள் தாரமாக நிற்றல்.
Special Remark:
`நாகம் ஒன்று; அதற்குப் படம் ஐந்து; உணவு நான்காய் உள்ளது; முட்புற்றிலே பொருந்தி நிறைவு பெற்றிருந்தது. ஆயினும், பின்பு அது தனக்கு இயல்பாய் உள்ள இரண்டு உடம்புகளோடும் முன் சொன்ன ஐந்து படங்களையும் விரித்து ஆடுதலை ஒழிந்து ஒரு படத்தை எடுத்து வேறோர் உடம்பிடமாக நின்றது` எனப் பிசி வகைக்கு வினைமுடிவு காண்க.
`பசுத்துவம் உடைய உயிர் ஐம்பொறிகளின்வழி அலமந்து துன்பம் நிறைந்த உடம்பினுள் தங்கி வினைப்பயன்களை நுகர்ந்து களித்திருந்தது; ஆயினும், அஃது ஐம்புல அவாவை நீத்த பொழுது திருவருள் நாட்டம் ஒன்றே உடையதாய் அத் திருவருளே தாரமாகநின்று இன்புற்று` என்பது இதனுட் கூறப்பட்ட பொருள்.
``நாகமும்``என்னும் உம்மை இழிவு சிறப்பு. ``நாலது`` என்பதில் அது பகுதிப்பொருள் விகுதி. `இரண்டோடும்` என உருபு விரிக்க. `உடம்பே இடமாம்` எனப் பிரிநிலை ஏகாரத்தை மாற்றி உரைக்க. அங்ஙனம் உரைக்கவே, `உடம்பு, அருளுடம்பு` என்பது பெறப்படும்.
இதனால், ஐம்புலப் பற்று அற்றவழியே துன்பம் நீங்கி, இன்பம் உண்டாதல் கூறப்பட்டது.