ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 4.துறவு

பதிகங்கள்

Photo

கேடும் கடமையும் கேட்டுவந் தைவரும்
நாடி வளைந்தது நான்கட வேனலேன்
ஆடல் விடையுடை யண்ணல் திருவடி
கூடும் தவம்செய்த கொள்கையன் றானே.

English Meaning:
Stand Steadfast in the Goal of Tapas

Spotting my failings, demanding tribute of me,
The five senses in ambush held me;
That indeed is not of my seeking;
Firm in tapas, I stand;
Seeking the hallowed Feet of the dancing Lord,
That on the sacred bull rides.
Tamil Meaning:
`தீயன ஆவனவும், நல்லன ஆவனவும் இவை இவை` எனக் குருவினிடத்துக் கேட்டுணர்ந்து` தீயவற்றினின்றும் விலகி வந்து சிவனது திருவடியைச் சேர்தற்குரிய தவத்தைச் செய்த நல்ல கோட் பாட்டை யுடையேன். அதனால் நான் ஐம்புல வேடர்கள் நினைத்து வந்து என்னைச் சூழ்ந்து நின்ற செயலுக்கு யாதும் கடவேனல்லேன்.
Special Remark:
முதலடியை ``ஐவரும்`` என்பதொழித்து மூன்றாமடிக்கு முன்னர்க் கூட்டியுரைக்க. `குருவின்பால்` என்பது ஆற்றலால் வந்தது. ஐவர், குறிப்புருவகம், ``வளைந்தது`` என்பது, அச்செயற்கு நிமித்த மாயதன்மேல் நின்றது. அதுதான் துறவு வாராது பற்றினை மிகுவித்தல். ``அதற்கு யாதும் கடவேனலேன்`` என்றதனால், `அவரை வென் றொழிப்பேன்` என்றதாயிற்று. ``யானேதும் பிறப்பஞ்சேன் இறப்ப தனுக் கென்கடவேன்``1 என்றார் ஆளுடைய அடிகளும், கூடும் தவம் - கூடுதற்கு ஏதுவாகிய தவம். ஈற்றடியின் இறுதியில், `ஆகலான்` என்பது எஞ்சி நின்றது. `குருவின்பால் கேட்டு வந்து தவம் செய்த கொள்கையேன் ஆகலான் நான் கடவேனலேன்` என்றதனால், நிரம்பிய துறவுக்குத் தவமும், அத்தவத்திற்குக் குருவருளும் காரண மாதல் பெறப்பட்டது. இக்குரு கிரியாகுரு என்க.
இதனால் துறவு வருமாறு கூறப்பட்டது.