ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 4.துறவு

பதிகங்கள்

Photo

பிறந்தும் இறந்தும்பல் பேதைமை யாலே
மறந்த மலஇருள் நீங்க மறைந்து
சிறந்த சிவன் அருள் சேர்பரு வத்துத்
துறந்த உயிர்க்குச் சுடரொளி யாமே.

English Meaning:
Renunciation Leads to Light:

A myriad times are they born and dead,
In a million folly they forget this;
And in the darkness of Mala are close enveloped;
When at last the hidden Grace of Siva bursts forth
And chases the Night away,
Then is the moment for the soul to renounce;
When it does then, a radiant Light it becomes.
Tamil Meaning:
ஆணவ மலம் பரிபாகம் எய்தாத பொழுது சத்தி நிபாதமும் வாராமையால் அம்மலம் பலமாயப் பொருள்களின்வழிப் பலவகை மயக்கத்தைச் செய்தலால் பிறந்தும், இறந்தும் உயிர்கள் தன்னை மறந்து நின்ற பொழுது அவற்றது அறிவினுள்ளே மறைந்து நின்றும், பின் அம் மலம் பரிபாகம் எய்தியபொழுது சத்திநிபாதம் வரு தலால் உயிர்கள் தன்னை நினைந்தவழி அச்சத்திநிபாத நிலை கட்கு ஏற்ப வெளி யிடத்தும், உள்ளே இதயத்தும் உருவம், அருவுருவம், அருவம் என்னும் தடத்தநிலைகளிலும், அறிவின்கண் சொரூப நிலை யிலும் முறையானே விளங்கிநிற்கின்ற சிவன் அச்சத்தி நிபாத நிலை கட்கு ஏற்பத்தோன்றும் துறவுணர்வின் அளவாக, முன்னர்ச் சிறிதாய்த் தோன்றிப் பின் பெரிதாய்ச் சுடர்விட்டு ஒளிர்கின்ற பேரொளி போல விளங்கிநிற்பன்.
Special Remark:
பேதைமை, இங்கு மயக்க உணர்வு. இதனைத்தரும் ஆணவ சத்தி, `அதோநியாமிகாசத்தி` எனப்படும். இஃது உயிர் தோறும் ஒவ்வொன்றேயாயினும் அதற்கு வாயிலாய் உள்ள பொருள் களது பன்மை பற்றிப் பலவாயிற்று. ``பல்பேதைமையாலே`` என்பதை முதற்கண்வைத்து உரைக்க. ``மறந்த`` என்னும் பெயரெச்சம், ``இருள்`` என்னும் ஏதுப்பெயர் கொண்டது. `நீங்கச் சிறந்த` என்க. ``மறைந்து சிறந்த`` என்பதற்கு, `முன்னர் மறைந்து பின்னர்ச் சிறந்த` என உரைக்க, முன்னைநிலை மறத்தலாகவே, பின்னைநிலை நினைத்தலாயிற்று. ``சிறந்த`` என்றது, `படிமுறையான் ஓங்கி நின்ற` என்றவாறு. அருள் - அருட்சத்தி. ``அருள்சேர் பருவத்து`` என்பதை ``மறைந்து`` என்றதன் பின்னர்க் கூட்டுக. இதனானே, `முன்னைநிலை அருள்சேராப்பருவம்` என்பது போந்தது. `பருவத்து ஆம்` என இயையும். `ஆதல் துறந்த உயிர்க்கு` என்றதனால், அவ்விடத்துத் துறவுதானே உண்டாதல் பெறப் பட்டது. சிவன் மறைந்து நின்ற காலத்துப் பிறப்பிறப்பாய பெருந் துன்பம் உளதாதல் கூறவே, அவன் விளங்கிநின்ற காலத்துப் பேரின்பம் உளதாதல் விளங்கிற்று. `அது துறவால் வருவது` என்பதே இங்குக் கருதப்பட்டபொருள்.
``ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்;
ஆசை விடவிட ஆனந்த மாமே`` 1
என நாயனார் முதற்கண் அருளிச்செய்தமை காண்க.
இதனால் பற்றுள்ளம் - மலத்தாலும், சத்திநிபாதம் இன்மை யாலும் உளதாதலும், துறவுள்ளம் - மலபரிபாக சத்திநிபாதங்களால் உளதாதலும், அவ்விரண்டானும் முறையே பிறவித்துன்பமும், வீட்டின்பமும் உளவாதலும் கூறப்பட்டன.