ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 4.துறவு

பதிகங்கள்

Photo

மேற்றுறந் தண்ணல் விளங்கொளி கூற்றுவன்
நாட்டுறந் தார்க்கவன் நண்பன் அவாவிலி
கார்த்துறந் தார்க்கவன் கண்ணுத லாய்நிற்கும்
பார்த்துறந் தார்க்கே பதஞ்செய லாமே.

English Meaning:
Liberation is for the Renunciate Alone

The Lord of renunciation,
He is the Shining Light above;
He is the Friend of all,
Who have surmounted Death`s days;
He is devoid of desires;
The guiding light of all those
Who Darkness renounced;
Only to those who abandoned this world,
Will His Feet within reach be.
Tamil Meaning:
அநாதியே துறவனாய் நிற்கும் இறைவன் அத் தன்மையாலே ஒருவர் விளக்க வேண்டாது தானே விளங்கும் ஒளியாய் உள்ளான். உலகருள் கூற்றுவன் வரும் நாளை யிலராயினா ர்க்கு அவன் தோழனாய் விளங்குகின்றான். ஒரு பொருளிலும் பற்று இல்லாதவனாகிய அவன் `அஞ்ஞானம்` என்னும் இருளின் நீங்கி னவர்க்கு அவன் சிவனாய் வெளிநிற்கின்றான். அதனால், உலகப் பற்றின் நீங்கினவர்க்கே தம்மை அவனது நிலையைப் பெறுதற்குத் தக்கவராகச் செய்து கொள்ளுதல் கூடும்.
Special Remark:
``மேலைத் - தவத்தளவே யாகுமாம் தான் பெற்ற செல்வம்``1 என்பதிற்போல, ``மேல்`` என்பது, `முற்காலத்தில் என்னும் பொருட்டாய், அநாதி நிலையை உணர்த்திற்று. `துறந்த அண்ணல்` என்பதில் பெயரெச்சத்து அகரம் தொகுத்தல் பெற்றது. `மேல் துறந்த` என உடம்பொடு புணர்த்ததனால், அதற்கு இவ்வாறு உரை கூறப்பட்டது. `கூற்றுவன் வரும் நாள்` என்றது. `இறப்பு` என்ற வாறு, `தவத்தால் கூற்றங் குதித்தலும் கைகூடும்`2 ஆதலின், கூற்றுவன் நாள் துறந்தார். தவத்தவராயினர். இத்தவம் யோகம். இது ``கூற்றை யுதைக்கும் குறிப்பாதலும்``, இதனை யுடையார்க்குச் சிவன் தோழனா தலும் நினைக. `கருமை` என்பதன் திரிபாகிய `கார்` என்பது இருளைக் குறித்தது. யோகிகட்குத் தோழனாகின்ற சிவன் ஞானிகட்கு உண்மைச் சிவனாதல் அறிக. பார் - பூமி; உலகம் இஃது இதன்மேற் செய்யப்படும் பற்றின்மேல் நின்றது. கார்த்துறந்தார், பார்த்துறந்தார் என்பன ஐந்தா வதன் தொகை. பதம் - பக்குவம். இது, கூற்றுவன் நாள் துறத்தற்கும், சிவனை நண்பனாகவும், சிவனாகவும் பெறுதற்கும் ஏற்கு மாற்றால் பல திறத்ததாம். `இவை அனைத்திற்கும் துறவே காரணம்` என்றவாறு. இதனுள் இன எதுகை, மூன்றாமெழுத் தெதுகைவந்தன.
இதனால், துறவே வீட்டு நெறியின் பல நிலைகட்கும் முதலாதல் கூறப்பட்டது.