ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 11. சங்காரம் 

பதிகங்கள்

Photo

நித்தசங் காரமும் நீடிளைப் பாற்றலின்
வைத்தசங் காரமும் மன்னும் அனாதியில்
சுத்தசங் காரமுந் தோயாப் பரன்அருள்
உய்த்தசங் காரமுன் நாலாம் உதிக்கிலே.

English Meaning:
Thus are mergences Four;
The Daily mergence in deep Sleep;
The next mergence that gives the soul a longer rest;
The Pure mergence that puts the Soul in primal quiescence;
The Redemption mergence that steeps the Soul in Lord`s Grace.
Tamil Meaning:
நித்திய சங்காரம், அன்று உழைத்த உழைப்பினால் உண்டாகிய இளைப்பினை ஆற்றக் காண்டலால், ஆயுட் சங்காரமும் அப்பிறப்பில் உண்டான இளைப்பை ஆற்றுதற்பொருட்டு என்றும் உளதாய்நிற்கும். `சருவ சங்காரத்தில் எல்லாக் கருவிகளும் முற்ற அழிந் தொழிவதால், அதுவே சிவப்பேறு போலும்` எனின், அன்று; திருவருட் சங்காரம் உண்டாய வழியே `பிறத்தல், வாழ்தல், இறத்தல்` என்னும் மூன்றும் அற்ற நான்காம் நிலையாகி `வீடுபேறு` எனப்படும் சிவப்பேறாம்.
Special Remark:
தோயா அருள் - அருள் தோயாதது. `உய்த்த சங்காரம் முன் உதிக்கில் நால் ஆம்` எனக் கூட்டுக. நான்கு, `நால்` என நின்றது. இவை நான்கு திருமந்திரங்களாலும், `இலயங்கள் (சங்காரங்கள்) மூன்று (தி.10 பா. 417) இவை` என்பதும் அவற்றின் இயல்புகளும் பலவாற்றால் விளங்கக் கூறி, சங்காரத்தையே வீடுபேறு என மலைவார்க்கு அங்ஙனம் மலையாமைப்பொருட்டு அதனையும் ஒரு சங்காரமாக வைத்து அதன் இயல்பு உணர்த்தப்பட்டது.தத்துவம் முப்பத்தாறனுள் மா பூதம் - 5, ஞானேந்திரியம் - 5, கன்மேந்திரியம் - 5 ஆகப் பதினைந்தும் தூல சரீரம். `அன்னமய கோசம்` என்பதும் இதுவே. தன்மாத்திரை - 5, சித்தம் ஒழிந்த அந்தக் கரணம் - 3 ஆக எட்டும் சூக்கும சரீரம். `பிராணமய கோசம்` என்பதும் இதுவே. எட்டுத் தத்துவம் கூடியதாதல் பற்றி இதனை `புரியட்டச் சரீரம்` எனவும் கூறுவர். இந்த 23 - க்கு மேல் 24 ஆவதாகிய குண தத்துவமே குண சரீரம். `மனோமய கோசம்` என்பதும் இதுவே. `குண தத்துவமே சித்தம்` என்பது மேலே ((தி.10 382ஆம் பாடலின் குறிப்புரை) சொல்லப்பட்டது. குண தத்துவத்திற்குமேல் உள்ள `புருடன்` என்பது ஒரு தனித் தத்துவம் அன்று. காலம், நியதி, கலை, வித்தை, அராகம் - ஐந்தும் கூடியது கஞ்சுக சரீரம். விஞ்ஞானமய கோசம் என்பதும் இதுவே. `மாயை` என்னும் தத்துவமே காரண சரீரம். `ஆனந்தமய கோசம்` என்பதும் இதுவே. சிவ தத்துவங்கள் `நம்மனோர்க்கு உடம்பாய் வந்து பொருந்துதல் இல்லை` என்பது மேலே கூறப்பட்டது. (தி.10 பா. 379)