ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 11. சங்காரம் 

பதிகங்கள்

Photo

அங்கிசெய் தீசன் அகலிடஞ் சுட்டதவ்
வங்கிசெய் தீசன் அலைகடற் சுட்டதவ்
வங்கிசெய் தீசன் அசுரரைச் சுட்டதவ்
வங்கிஅவ் வீசற்குக் கைஅம்பு தானே.

English Meaning:
With fire the Lord burnt all Space
With fire the Lord burnt the Oceans,
With fire the Lord burnt the Asuras
Fire, verily, is the Lord`s shaft on hand.
Tamil Meaning:
சிவபெருமான் உலகம் முழுவதையும் அழித்ததும், கடல்நீரை மிக்கு வாராதவாறு அடங்கியிருக்கச் செய்ததும், முப்புரத் தவர் முதலிய அசுரர்களை அழித்ததும் நெருப்பை உண்டாக்கியே யாம். அதனால், நெருப்பே அவன் கையம்பாய் விளங்குகின்றது.
Special Remark:
கடவுட் கொள்கை இல்லாதவருள் சிலர் (உலகாய தரும், மீமாஞ்சகரும்) `உலகம் தோன்றலும்,அழிதலும் இல்லாது என்றும் உள்ளதேயாகும்` என்பர். கடவுட் கொள்கை உடையவ ருள்ளும் சிலர் (பாஞ்சராத்திரிகள் முதலியோர்) `உலகத்தைக் கடவுள் அழிக்கமாட்டான்` என்பர். `அவரெல்லாரும் `நெருப்பு` என்ற ஒரு பொருள் இருப்பதை உற்று நோக்குவாராயின், தமது மயக்கம் நீங்குவர்` என்றற்கு நெருப்பு இறைவனுக்கு அழித்தற் கருவியாய்ப் பயன்படுமாற்றைக் கூறினார். ``அழிப்பு இளைப்பாற்றல்`` (சிவஞானசித்தி. சூ. 1.37) என்று இதனை முதற்கண் எடுத்துக் கூறியதும் இதுபற்றி என்க. உலகம் அழி பொருளாதலை உணர்வார் எவரும் அது தோற்றம் உடைத்து என்பதையும் உணர்வர் என்க. பூதங்கள் ஐந்தனுள் ஆகாயம் ஒழிந்த, காட்சிப் பொருளாய் நிற்கும் ஏனை நான்கும் படைத்தல் முதலிய மூன்றனையும் செய்யுமாயினும் நிலத்திற்கு உரிமைத் தொழில் படைத்தலும், நீருக்கு உரிமைத் தொழில் காத்தலும், நெருப்பிற்கு உரிமைத் தொழில் அழித்தலும் ஆதல் பற்றி அதனையே இறைவனுக்கு அழித்தற் கருவியாக அருளிச்செய்தார். `நிலம், நீர், தீ` என்ற மூன்றற்கும், `பிரமன், மால், உருத்திரன்` என்பவரை உரிமைக் கடவுளராகக் கூறலின், சிவாகமங்கட்கும் கருத்து இதுவாதல் அறிந்து கொள்ளப்படும்.
இதனால், `இறைவன் உலகத்தைப் படைத்தல் காத்தல் களுடன் அழித்தலும் செய்வன்` என்பது கூறப்பட்டது.