ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 23. கல்வி

பதிகங்கள்

Photo

பற்றது பற்றிற் பரமனைப் பற்றுமின்
முற்றது எல்லாம் முதல்வன் அருள்பெறில்
கிற்ற விரகிற் கிளரொளி வானவர்
கற்றவர் பேரின்பம் உற்றுநின் றாரே.

English Meaning:
If desire you must, the Lord in desire seize,
If the Lord`s Grace you get, all things are obtained;
Like the deep-skilled Devas of flaming Light;
The truly learned Heavenly Bliss attained.
Tamil Meaning:
யாதொரு செயலாயினும் அது முற்றுப் பெறுகின்ற அந்நிலைமையெல்லாம் முதற்கடவுளது திருவருள் பெற்றவழியே ஆவதாம். `எல்லாவற்றையும் முடிக்க வல்ல வன்மையை உடை யோம்` எனத் தம்மை மதித்துக்கொள்கின்ற தேவரேயாயினும், அவனது இயல்பை உணர்த்தும் நூல்களைக் கற்றவரே அவனது பேரின்பத்தை அடைந்தனர்; ஏனையோர் அடைந்திலர். அதனால், நீவிர் நல்லதொரு துணையைப் பற்றவேண்டின், சிவபெருமானையே அறிந்து பற்றுதல் வேண்டும்.
Special Remark:
`ஆதலின் அவனை அறிவிக்கும் கல்வியை ஒழியாது கற்றுக்கொண்மின்` என்பது குறிப்பெச்சம். முதலடியை இறுதியிற் கூட்டி உரைக்க. முற்று அது, வினைத்தொகை. `ஆவதாம்` என்பதும், `ஆயினும்` என்பதும், சொல்லெச்சம். `கற்றவரே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று.
இதனால், எத்தகையோர்க்கும் மெய்ப்பொருட் கல்வி இன்றி வீடு எய்தலாகாமை கூறப்பட்டது. முனிவரும், தேவரும், கணங்களும் போல்வாரும் சிவபெருமானிடம் வேதாகமங் களைக் கேட்டுணர்ந்தன ராகக் கூறும் புராண வரலாறுகளை நினைவு கூர்க.