
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 23. கல்வி
பதிகங்கள்

பற்றது பற்றிற் பரமனைப் பற்றுமின்
முற்றது எல்லாம் முதல்வன் அருள்பெறில்
கிற்ற விரகிற் கிளரொளி வானவர்
கற்றவர் பேரின்பம் உற்றுநின் றாரே.
English Meaning:
If desire you must, the Lord in desire seize,If the Lord`s Grace you get, all things are obtained;
Like the deep-skilled Devas of flaming Light;
The truly learned Heavenly Bliss attained.
Tamil Meaning:
யாதொரு செயலாயினும் அது முற்றுப் பெறுகின்ற அந்நிலைமையெல்லாம் முதற்கடவுளது திருவருள் பெற்றவழியே ஆவதாம். `எல்லாவற்றையும் முடிக்க வல்ல வன்மையை உடை யோம்` எனத் தம்மை மதித்துக்கொள்கின்ற தேவரேயாயினும், அவனது இயல்பை உணர்த்தும் நூல்களைக் கற்றவரே அவனது பேரின்பத்தை அடைந்தனர்; ஏனையோர் அடைந்திலர். அதனால், நீவிர் நல்லதொரு துணையைப் பற்றவேண்டின், சிவபெருமானையே அறிந்து பற்றுதல் வேண்டும்.Special Remark:
`ஆதலின் அவனை அறிவிக்கும் கல்வியை ஒழியாது கற்றுக்கொண்மின்` என்பது குறிப்பெச்சம். முதலடியை இறுதியிற் கூட்டி உரைக்க. முற்று அது, வினைத்தொகை. `ஆவதாம்` என்பதும், `ஆயினும்` என்பதும், சொல்லெச்சம். `கற்றவரே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று.இதனால், எத்தகையோர்க்கும் மெய்ப்பொருட் கல்வி இன்றி வீடு எய்தலாகாமை கூறப்பட்டது. முனிவரும், தேவரும், கணங்களும் போல்வாரும் சிவபெருமானிடம் வேதாகமங் களைக் கேட்டுணர்ந்தன ராகக் கூறும் புராண வரலாறுகளை நினைவு கூர்க.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage