ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 23. கல்வி

பதிகங்கள்

Photo

வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன்
கழித்துணை யாம்கற் றிலாதவர் சிந்தை
ஒழித்துணை யாம்உம் பராய்உல கேழும்
வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே. 

English Meaning:
In life`s journey a Support and Elixir rare is He,
An unfailing Guide – but to the ignorant of mind,
No support He – in all the seven Heavenly globes,
Sure prop is He, the Mighty being. Great and Kind.
Tamil Meaning:
வானுலகமும், பிற உலகங்களுமாய் நின்று எல்லா உயிர்கட்கும் எவ்விடத்தும் துணையாய் நிற்கும் பேராற்றலும், பேரருளும் உடையவனாகிய இறைவன், கல்வியால் யாவர்க்கும் நன் னெறித் துணையாயும், அமுதமாயும் நிற்கின்றவர்கட்கே விளங்கித் தோன்றிப் பெருந்துணையாய் நிற்பன். கல்வி இல்லாதவர்க்கு அவர் உள்ளம் தன்னை நீங்குதற்கே துணையாவன். (அறியாமையை மிகுவிப்பன் என்பதாம்)
Special Remark:
வழித்துணையாதலும், `யாண்டு பலவாயினும் நரையிலவாக்கி` அமுதமாதலும் கற்றார்க்கன்றிக் கூடாமையின், `கல்வியால்` என்பது ஆற்றலால் விளங்கிற்று. இதனாலும் கல்வியது சிறப்புக் குறிக்கப்பட்டது. `கழிதுணை, ஒழிதுணை` என்பன எதுகை நோக்கி விரித்தல் பெற்றன. கழி, உரிச்சொல். ``கற்றல் கேட்டல் உடையார் பெரியார்`` (தி.1 ப.1 பா.2) ``கல்லா நெஞ்சின் நில்லான் ஈசன்`` (தி.3 ப.40 பா.3) என்பன திருஞானசம்பந்தர் வாக்காதல் அறிக.
இதனால், `திருவருள் பெறுதல் கல்வியானே ஆவது` என்பது கூறப்பட்டது. கண்ணப்பர் முதலாயினார் கல்வி இன்றியும் திருவருள் பெற்றாரால் எனின், அவரெல்லாம் முற்பிறப்பிற் கற்று இப்பிறப்பில் அதன் பயனை எய்தினார் என்பதனை,
``கலிமலிந்த சீர்நம்பி கண்ணப்பன்`` -தி.7 ப.39 பா.2
என்பது முதலிய அருட்டிருமொழிகளான் அறிந்துகொள்க. இது பற்றியன்றே திருவள்ளுவர்,
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து. -குறள், 298
எனவும்,
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு. -குறள், 297
எனவும் ஓதுவாராயினர் என்க.