ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 23. கல்வி

பதிகங்கள்

Photo

குறிப்பறிந் தேன்உடலோடுயிர் கூடிச்
செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை
மறிப்பறி யாதுவந் துள்ளம் புகுந்தான்
கறிப்பறி யாமிகுங் கல்விகற் றேனே. 

English Meaning:
The meaning I knew of life and body in union knit;
In the depth of my being I knew of the Lord of Devas untold;
Denying naught, He stept straight into my yearning heart;
Thus I gained the Learning Great, freeing us from fleshy fold.
Tamil Meaning:
மாசில்லாத, உயர்ந்த கல்வியை யான் கற்றேன்; அதனால் உயிர் உடலோடு கூடிநின்றேனாய், அறியத்தக்க பொருளை அறிந்தேன்; அதன் பயனாக இறைவனை உள்ளத்திலே இருத்தத் தெரிந்தேன். அதனால், அவனும் மீண்டுபோகாதவனாய் என் உள்ளத்திலே வந்து புகுந்து நின்றான்.
Special Remark:
`ஆகவே, நீவிரும் இப்பயன் வேண்டின் மாசில்லாத உயர்ந்த கல்வியைக் கற்றுக்கொள்ளுங்கள்` என்பது குறிப்பெச்சம். ஈற்றடியை முதலிற் கொள்க. `உடலுயிரது` என்பது பாடம் அன்று. ``கூடி`` என்றது, `கூடியதன் பயனைப் பெற்று` என்றவாறு. `கூடிக் குறிப்பறிந்தேன்` எனவும், `தேவர் பிரானைச் செறிப்பறிந்தேன்` எனவும் முன்னே கூட்டுக. மறிப்பு - மீட்சி. கறிப்பு - உணவினின்று உமிழப்படுவது; மாசு. `கற்பவையே கற்றல் வேண்டும்` (குறள், 391) என்றற்கு, ``கறிப்பறியா மிகுங்கல்வி`` என்றார்.
இதனால், `சிறப்புடைக் கல்வியே கல்வி` என்பதும், அதனால் பெறும் பயனும் கூறப்பட்டன.