ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 22. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

பதிகங்கள்

Photo

ஈசன் அறியும் இராப்பக லுந்தன்னைப்
பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத்
தேசுற் றறிந்து செயலற் றிருந்திட
ஈசன்வந் தெம்மிடை ஈட்டிநின் றானே. 

English Meaning:
The Lord God knows them who, by night and day,
Seat Him in heart`s core, and in love exalted adore;
To them wise with inner light, actionless in trance,
He comes, and, in close proximity, stands before.
Tamil Meaning:
இரவும், பகலும் இடைவிடாது தன்னையே தம் அன்பிற்கு உரியவனாகக் கொண்டு, அன்பு செய்கின்ற அன்பர்களைச் சிவபெருமான் நன்கறிவன். ஆதலால், ஞானத்தைப் பெற்று அன்பினால் வசமிழந்து நின்றமையால், அவன் எங்களிடையே வந்து எங்களைத் தன்னோடு அணைத்துக் கொண்டான்.
Special Remark:
`இருந்திடில்` என்பது பாடம் அன்று. ``எம்`` என்றது, தம்மோடு ஒத்தாரை. ஈட்டுதல், `ஈண்டுதல்` என்னும் தன்வினைச் சொல் திரிந்த பிறவினைச்சொல்; ஈண்டுதல் - சேர்தல்; ஈட்டுதல் - சேர்த்தல்.
இதனால், அன்பும், அதன் பயனும் கைவரப்பெற்ற தம் அநுபவம் கூறப்பட்டது.