ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 22. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

பதிகங்கள்

Photo

இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்தருள் செய்திடும் உத்தம நாதன்
கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு
மகிழ்ந்தன்பு செய்யும் மருளது வாமே. 

English Meaning:
What we scorned and what we gained, He knows;
The righteous Lord in Love rewards as merit befits;
Who, with burning zeal, seek Him with heart of love
To such, well-pleased, He His Grace awards.
Tamil Meaning:
மக்கள் அன்பைப் போற்றாது இகழ்ந்து நடத் தலையும், இகழாது போற்றிப் பெற்று ஒழுகுதலையும் சிவபெருமான் நன்கறிவன் ஆதலின், முதற்படியாகிய அன்பை முதலிற் பெற்றுப் பின்பு அதன் முடிநிலையாகிய அருளை மிகச் செய்ய வல்லவர்க்கே அவன் விரும்பி அருள்புரிவன்; அதற்குக் காரணம், அன்பை உவந்து அதன்மேல் அவன் கொண்டுள்ள பித்தேயாம்.
Special Remark:
இரண்டாம் அடியை மூன்றாம் அடியின் பின்னர்க் கூட்டி உரைக்க. `இகழ்தலும், பெறுதலும் அன்பை` என்பது பின்வரும் குறிப்பால் விளங்கிற்று. கொழுந்து - இளையநிலை. ``அருள் என்னும் அன்பீன் குழவி` என்ற திருக்குறளிலும், `அன்பின் முதிர்ந்த நிலையே அருள்` என்பது கூறப்பட்டது. `அன்பு காரணம்பற்றிப் பிறப்பது` எனவும், `அருள், காரணம் பற்றாது பிறப்பது` எனவும் உணர்க. `வல் லார்க்கே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. `அன்பு செய்யும்` என்பதை, `அன்பின்மேற் செய்யும்` என ஏழாவதாக விரிக்க. பெருவிருப்பை, `பித்து` என்றார். ``அது`` என்பது ஆகுபெயராய், `அதன் காரணம்` எனப் பொருள் தந்தது. `அது மகிழ்ந்தன்பு ... ... ஆம்` எனக் கூட்டுக.
இதனால் இறைவன் அன்பு செய்வார்க்கே அருள் செய்தலும், செய்யாதார்க்கு அருள் செய்யாமையுமாகிய இரண்டும் தொகுத்துக் கூறப்பட்டன.