ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 22. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

பதிகங்கள்

Photo

அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி
இன்புறு கண்ணியொ டேற்க இசைந்தனன்
துன்புறு கண்ணிஐந் தாடுந் தொடக்கற்று
நண்புறு சிந்தையை நாடுமின் நீரே.

English Meaning:
If we have love there will be spiritual glory, and
The grace of the Mother will come to us,
So give up attachment to the body-mind complex,
And seek the Lord ardently.
Tamil Meaning:
அன்பு பொருந்திய உள்ளத்தில் பல்வகை நிலைகளிலும் மேற்பட்டு விளங்குகின்ற சிவபெருமான், இன்பம் பொருந்திய அறக்கருணைக் கண்ணுடையவளாகிய சத்தியோடே அவ்வுள்ளங்களை ஏற்றுக் கொள்ளுதற்கு இசைந்து நிற்கின்றான். ஆதலால், துன்பம் பொருந்திய மறக்கருணைக் கண்ணுடையவளாகிய திரோதான சத்தி ஐம்புலன்களின் வழி நின்று ஆடுகின்ற ஆட்டமாகிய கட்டினின்றும் விடுபட்டு, அன்பு பொருந்திய மனத்தைப் பெறும் வழியை நீங்கள் நாடுங்கள்.
Special Remark:
``ஒளி`` என்றது உருவகம். அஞ்ஞான இருளைப் போக்குதல் பற்றி இவ்வாறு உருவகித்தார். அவ்வொளி ஒன்றே யாயினும், நிலை வேறுபாட்டால் பலவாகக் கூறப்பட்டது. அந் நிலைகளை,
நல்லசிவ தன்மத்தால் நல்லசிவ யோகத்தால்
நல்லசிவ ஞானத்தால் நானழிய - வல்லதனால்
ஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படுங்காண்
ஆரேனும் காணா அரன். -திருக்களிற்றுப்படியார் - 15
என்பதனானும், பிறவாற்றானும் அறிக. அருட்சத்தியே சிவத்தை அடைவித்தலின், திரோதானசத்தி, தானே தொழில் செய்வதாகக் கூறினார். அருட்சத்தி அன்பின் வழியே சிவத்தை அடைவிக்கும் என்பதை ``அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி`` என உடம்பொடு புணர்த்து ஓதினார். அதனானே, `வீடுபெற வேண்டில்; உள்ளம் அன்புடையது ஆமாற்றை நாடுங்கள்` என்றார். ``நண்பு`` என்றது, அன்பை. ``நண்புறு சிந்தையை`` என்றாராயினும், `சிந்தை நண்புறுமாற்றை` என்பது கருத்து என்க. ``நீர்`` என்றது சிவனைப் பெற விரும்புவாரை `ஐந்தோடு` என உருபு விரிக்க.
இதனால், பெத்தர்களுக்கு விளங்காது நிற்கின்ற சிவபெரு மான், முத்தர்கட்கு `அன்பினில் விளையும் ஆரமுதாய்` (தி.8 பிடித்த பத்து, 3) விளங்கி நின்றருளுதல் கூறப்பட்டது.