ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 22. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

பதிகங்கள்

Photo

புணர்ச்சியுள் ஆயிழை மேல்அன்பு போல
உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல் லாருக்
குணர்ச்சியில் லாது குலாவி உலாவி
அணைத்தலும் இன்பமதுஇது வாமே. 

English Meaning:
Like the sweet love in sex-act experienced,
So, in the Great Love, let yourself to Him succumb;
Thus in Love sublimed, all your senses stilled,
Bounding in Bliss Supreme, That this becomes

Tamil Meaning:
பெண்டிரோடு கூடும் கூட்டத்தில் ஆடவர் அப் பெண்டிர்மேல் வைக்கின்ற அன்பிலே அறிவழிந்து நிற்றல்போல, சிவபெருமானிடத்துச் செய்கின்ற அன்பிலே தம் அறிவழிந்து அந்நிலையில் நிற்க வல்லார்க்கு அதனால் விளைகின்ற பேரின்பம் அவரைப் பின்னும் அந்நிலையினின்றும் பெயராத வகையிற் பெருகிவிளங்கி, விழுங்கி இவ்வன்பே தானாகி நிற்கும்.
Special Remark:
``ஆயிழை`` என்றது இனங்குறித்து நின்றது. பொருளிற் கூறப்பட்ட ஒடுங்குதலை உவமைக்குங் கூட்டுக. ஆயிழை மேல் அன்பை ஒடுங்குதல் மாத்திரைக்கே உவமைபோலக் கூறினா ராயினும், ஏனையவற்றிற்கும் ஆதலை அறிந்து கொள்க. இல்லாது - இல் லாதபடி. பெருகுதலை, `உலாவுதல்` என்றார். குலாவுதல் - விளங் குதல். ``இன்பமது`` என்றதில் அது, பகுதிப்பொருள் விகுதி. இஃது அதீதமாகிய முடிந்த அனுபவ நிலையைக் கூறியது. இவ்வாறே இந்நிலையை,
``சொற்பால் அமுதிவள் யான்சுவை என்னத்
துணிந்திங்ஙனே
நற்பால் வினைத்தெய்வம் தந்தின்று
நான் இவளாம் பகுதிப்
பொற்பார் அறிவார்`` (தி.8 திருக்கோவையார், 8)
``உணர்ந்தார்க் குணர்வரி யோன்தில்லைச் சிற்றம்
பலத்தொருத்தன்`` (தி.8 திருக்கோவையார், 9)
எனவும், மாணிக்கவாசகரும் குறித்தருளுதல் காண்க. `இவ்வதீத நிலையும் அன்பானன்றி ஆகாது` என்றபடி. மெய்கண்ட தேவரும் இதனை, ``அயரா அன்பின் அரன்கழல் செலுமே`` (சிவஞானபோதம் - சூ. 11) என ஓதியருளினார். ``அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே`` (தி.10 பா.268) என்றது இதனையே என்க.
இதனால், `அன்புடையார்க்கே சிவபெருமான் தன்னை முழுவதும் கொடுப்பன்` என்பது கூறப்பட்டது.