ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 22. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

பதிகங்கள்

Photo

நம்பனை நானா விதப்பொரு ளாகுமென்
றும்பரில் வானவர் ஓதுந் தலைவனை
இன்பனை இன்பத் திடைநின் றிரதிக்கும்
அன்பனை யாரும் அறியகி லாரே. 

English Meaning:
My Lord God whom the heavenly beings praise
As one into myriad forms and things outspread,
The Great Lover who inside love savours love`s tributes;
Sad indeed that few seek Him, or to Him are led.
Tamil Meaning:
அனைத்துயிர்களாலும் விரும்பத்தக்கவனும், மேலிடத்துத் தேவர் பலராலும் `எல்லாமாய் நிற்கும் கடவுள்` என்று சொல்லிப் போற்றப்படுபவனும், இன்ப அநுபவப் பொருளாய் உள்ளவனும், அப்பொருளில் நின்று எழுகின்ற இன்பமானவனும், அன்பிலே விளங்குபவனும் ஆகிய சிவபெருமானை அன்புடையவ ரல்லது பிறர் அறியமாட்டார்.
Special Remark:
``நம்பனை`` என்பது முதலியவற்றால், `அன்பு செய்யப்படுபவன் சிவபெருமானே யாதலைத் தெரித்துணர்த்தி, அவ் வாறாகவும் அதனைப் பலர் செய்கின்றிலர்` என்று இரங்கியவாறு.
``இன்பம்`` இரண்டும் ஆகுபெயர்கள். ``இரதிக்கும்`` என்றது `ரதிக்கும்` என்னும் ஆரியச்சொல்லின் திரிபு. ``அன்பன்`` என்றதனால், அறியமாட்டாதவர் அன்பில்லாதவர் என்பது போந்தது.
இதனால், அன்பில்லாதவர்க்குச் சிவன் அறியப்படானாதல் வகுத்துக் கூறப்பட்டது.