ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 16. அரசாட்சி முறை

பதிகங்கள்

Photo

தத்தஞ் சமயத் தகுதிநில் லாதாரை
அத்தன் சிவன்சொன்ன ஆகம நூல்நெறி
எத்தண் டமுஞ்செயும் அம்மையில் இம்மைக்கே
மெய்த்தண்டஞ் செய்வதவ் வேந்தன் கடனே.

English Meaning:
Who, by their professed faiths, do not abide,
Beside the judgement they receive in the life beyond,
In terms of Agamic law by Siva revealed,
Punished they shall be on earth by the just ruler of the land.
Tamil Meaning:
சமயிகள் பலரும் தம் தம் சமய அடை யாளங்களை மட்டும் உடையராய் அச்சமய ஒழுக்கத்தில் நில்லா தொழிவாராயின், அனைத்துச் சமயங்கட்கும் தலைவனாகிய சிவபெருமான் தான் தனது ஆகமத்திற் சொல்லியுள்ள தண்டங்கள் அனைத்தையும் மறுமையில் அவர்க்குச் செய்தல் திண்ணம் ஆயினும், இம்மையில் அவர்க்குரிய தண்டத்தைச் செய்தல் அரசனுக்குக் கடமையாகும்.
Special Remark:
`மறுமைத் தண்டம், அதன்பின் வரும் பிறப்பில் அப்பாவம் தொடராது கழிதற்பொருட்டாதலானும், அதனைச் செய்தல் பிறர்க்கு இயலாதாகலானும் அதனைச் சிவபிரான் தானே செய் வானாய், இம்மையிற் செய்யும் தண்டம் அப்பாவம் மறுமையில் தொடராது கழிதற்பொருட்டாதலின், அதனை அவன் அரசனுக்குக் கடமையாக்கினான். ஆகவே, அரசன் அக்கடமையினின்றும் வழுவுதல் கூடாது` என்பதாம். சமயங்கள் பலவும் உயிர்களின் அறிவு வளர்ச்சிப்படிகளேயாதலின், `அவற்றை மேற்கொண்டுள்ளோம்` என்பவர் அவ்வொழுக்க நெறி நில்லாராயின் பொய்ம்மையாளராய்ப் பிறரை வஞ்சித்துக் கேடெய்துவராகலின், அவ்வாறு ஆகாமைப் பொருட்டு அவரை ஒறுத்தல் அரசற்குக் கடமையாயிற்று.
இதனால், `அவரவர் மேற்கொண்ட சமயங்கள் பலவற்றையும் பழுதுபடாமற் காத்தல் அரசற்குக் கடன்` என்பது கூறப்பட்டது.