ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 16. அரசாட்சி முறை

பதிகங்கள்

Photo

வேந்தன் உலகை மிகநன்று காப்பது
வாய்ந்த மனிதர்கள் அவ்வழி யாநிற்பர்
பேர்ந்திவ் வுலகைப் பிறர்கொள்ளத் தான்கொள்ளின்
பாய்ந்த புலியன்ன பாவகத் தானே. 

English Meaning:
If the ruler exceeding well his state protects,
The subjects, in duty bound, to that same end incline;
When the enemy, lust of pride, the state invades,
Then, like a leopard, leaps the king to defend his domain.
Tamil Meaning:
அரசன் உலகத்தை மேற்கூறியவாற்றாலெல்லாம் காப்பது பலர்க்கும் நன்மையை மிகத் தருவதாகும். எவ்வாறெனில், அத்தகைய ஆட்சியில் பொருந்திய மக்கள் மேற்கூறிய நெறிகளிலே வழுவாது நிற்பராகலின். அரசன் அங்ஙனம் காத்தலினின்றும் பிறழ்ந்து தனது நாட்டைப் பகை மன்னர் வந்து கைப்பற்றுமாறு தான் தனது குடிமக்களைத் தமக்கும், அறத்திற்கும் உரியவராகக் கருதாது, தனது நலம் ஒன்றற்கே உரியதாகக் கருதிவிடுவானாயின், அவன் தனது பசியின்பொருட்டுப் பிற விலங்குகளைப் பாய்ந்து கொல்லும் புலியோடொத்த தன்மையனே ஆவன்.
Special Remark:
`அறநெறி பிறழ்ந்த அரசற்குக் கெடுவது மறுமை யேயன்றி இம்மையுமாம்` என்பார், ``இவ்வுலகைப் பிறர் கொள்ள`` என்றார். கொடுங்கோல் அரசனோடு குடிகளும், பிறரும் மேவுதல் (குறள் - 740 உரை) இன்மையால், அவன் தற்காத்தலையும் செய்து கொள்ளமாட்டாது பகைவர்க்கு எளியனாவான் என்க. `தாம்` என்பது பாடம் அன்று. ``தான்கொள்ளின்`` என்புழியும் `கொள்ள` என்பதே பாடமாயின் பொருள் இதுவேயாம் என்க. பாவகம் - தன்மை.
இதனால், `தன் கடமையினின்றும் வழுவுதல் அரசற்குப் பெருங்கேடு பயக்கும்` என்பது கூறப்பட்டது.