ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 16. அரசாட்சி முறை

பதிகங்கள்

Photo

மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில்
வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும்
பீடொன் றிலனாகும் ஆதலாற் பேர்த்துணர்ந்
தாடம் பரநூற் சிகையறுத் தால்நன்றே. 

English Meaning:
If Brahmins, from folly unredeemed, flaunt the tuft and thread,
That land droops and fades, its ruler`s glory runs to waste;
So, scanning deep in Wisdom`s light, the King shall clip
The thread and tuft for empty show kept and possessed.
Tamil Meaning:
`பிரமத்தை உணர்ந்தவனே பிராமணன்` என்று வாய்ப்பறை சாற்றிவிட்டு, அப்பொழுதே அம்முயற்சி சிறிதும் இன்றி மூடத்தில் அழுந்திக்கிடப்போர் குலப்பெருமை கூறிக்கொள்ளுதற் பொருட்டுப் பிராமணர்க்குரிய சிகையையும், பூணூலையும் முதன் மையாக மேற்கொள்வாராயின், அத்தன்மையோர் உள்ள நாடும், நன்னெறி நிகழாமையால் வளம் குன்றும்; அந் நாட்டிற்குத் தலை வனாகிய அரசனும் பெருவாழ்வுடையனாயினும், தன் கடமையைச் செய்யாமையால், பெருமை சிறிதும் இலனாவன். ஆதலால், அத்தன்மையாளரது உண்மை நிலையை அரசன் பல்லாற்றானும் ஆராய்ந்தறிந்து, வெளியாரை மருட்டும் அவரது பொய்வேடத்தைக் களைந்தெறியச் செய்தால், பலர்க்கும் நன்மை உண்டாகும்.
Special Remark:
வேடமாத்திரத்தானே தம்மைப் பிராமணர் என மதித்துக்கொள்வோர் தம் மூடத்தை நீக்கிக்கொள்ள முயலாராகலான் அவர்க்கும், அவரது வேடத்தால் அவரை உயர்ந்தோர் எனக் கருதி அவர்க்குப் பிறர் செய்யும் தானங்கள், அவரது தீயொழுக்கத்தால் உலகிற் பல தீச்செயல்கள் நிகழ்தற்கே காரணமாதலின் உலகிற்கும் உளவாகின்ற தீமைகள் அனைத்தும் அப்பொய் வேடத்தைக் களையவே நீங்க, மெய் வேடத்தாரால் நன்மை விளையும் என்பது பற்றி, ``அறுத்தால் நன்றே`` என்றார்.
இதனால், `அரசன் கடவுள் நெறியுள் வைதிக நெறியைக் காத்தல் வேண்டும்` என்பது சிறப்பாகக் கூறப்பட்டது.