ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 16. அரசாட்சி முறை

பதிகங்கள்

Photo

ஆவையும் பாவையும் மற்றற வோரையுந்
தேவர்கள் போற்றுந் திருவேடத் தாரையும்
காவலன் காப்பவன் காவா தொழிவனேல்
மேவும் மறுமைக்கு மீளா நரகமே. 

English Meaning:
The cow, the woman, the sacred Brahmins true,
And men in holy garb whom the Devas acclaim,
These the king shall protect; if that duty he ignores,
Irredeemable his hell shall be, cursed ever his name.
Tamil Meaning:
ஆக்களையும், பெண்டிரையும், துறவறத்தாரை யும், தேவர்களாலும் வணங்கப்படும் சிவனடியாரையும் பிறர் நலியாமல் காத்தற்குரியன் அரசன். அவன் அதனைச் செய்யாதொழி வனாயின் மறுமையில் மீளா நரகம் புகுவன்.
Special Remark:
`பாவையரையும்` என்பது குறைந்து நின்றது. `காப்பவன் காவலன்` என மாறிக் கூட்டுக. வைதிக வேள்வி சைவ வேள்விகட்கு அவியையும், சிவவழிபாட்டிற்குப் பால் முதலிய ஐந்தையும் தருவன ஆக்களும் (பசுக்களும்) `அறவோர்க்களித்தல், அந்தணர் ஓம்பல், துறவோர்க்கெதிர்தல், தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடல்` (சிலப்பதிகாரம் - கொலைக்களக் காதை) முதலியவற்றையும், சிவவழிபாடு செய்யும் ஆடவர்க்கு அதற்கு வேண்டுவனவற்றை அமைத்து உடன் இருந்து உதவுதலையும் செய்வோர் பெண்டிரும், அறமுதற் பொருள்களை உலகர்க்கு உணர்த்துவார் துறவறத்தவரும், சிவஞான சிவபத்திகளைப் பரிபக்கு வர்க்குத் தருவார் சிவனடியாரும் ஆகலானும், இவரை நலியும் இயல்பு உடையார் முறையே புலையரும், தூர்த்தரும், நாத்திகரும், புறச்சமயி களும் ஆகலானும் அவரால் இவர்க்கு நலிவு வாராமைக் காத்தல் அரசற்குக் கடன் என்பதும்,
`அக்கடனை அவன் ஆற்றாதொழியின், ஆற்றுவார் பிறர் இன்மையின் உளவாகும் தீங்குகட்கு அவனே காரணன் ஆதலின், அவன் நிரயத் துன்பத்தை நெடுங்காலம் எய்துவன்` என்பதும் கூறியவாறு. மறுமைக்கு - மறுமைக்கண்.
இதனால், `உலகியல், மெய்ந்நெறி` என்னும் இருவகை நன்னெறிகட்கும் ஊறுண்டாகாதவாறு காத்தல் அரசற்குக் கடன் என்பதும், அக்கடமையைச் செய்யாவழி அவற்கு உளதாகும் குற்ற மும் கூறப்பட்டன.