ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 16. அரசாட்சி முறை

பதிகங்கள்

Photo

ஞானமி லாதார் சடைசிகை நூல்நண்ணி
ஞானிகள் போல நடிக்கின் றவர்தம்மை
ஞானிக ளாலே நரபதி சோதித்து
ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே.

English Meaning:
The senseless fools donning sacred thread and matted locks,
And with chanting phrases pretend to wisdom unpossessed,
Them, the ruler of state shall, with wise men`s help, take and test,
And , for the country`s good, impart words in wisdom drest.
Tamil Meaning:
சிவஞானம் இல்லாத வெறுவியர் சிவஞானம் பெற்றுச் சிவனே ஆயினார் போலச் சிவனுக்குரிய சடை, சிகை, பூணூல் என்பவற்றைப் புனைந்துகொண்டு சிவஞானிகள் போல நடிப்பார் களாயின், அவரை அரசன் சிவஞானிகள் வாயிலாகவே பரிசோதனை செய்து உண்மைச் சிவஞானிகளாகச் செய்தல் நாட்டிற்கு நன்மை பயப்பதாகும்.
Special Remark:
எனவே, `அது செய்யாவழி நாட்டிற்குத் தீமை உண்டாகும்` என்றதாயிற்று. ஞானம் உண்மையை அறிதல் அரசற்குக் கூடாமையின், `ஞானிகளாலே சோதிக்க` எனவும், `சிவசின்னத்தைக் களைக` எனக் கூறுதலும் குற்றமாதலின், `அவர்க்குச் சிவஞானத்தை உண்டாக்குக` எனவும் கூறினார். `சடை` என்னும் கோலத்தைக் கூறவே, ஞானம், சிவ ஞானமாயிற்று.
இதனால், `அரசன் கடவுள் நெறியில் சிவநெறியைப் பழுது படாமல் காத்தல் வேண்டும்` என்பது சிறப்பாகக் கூறப்பட்டது.