ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 16. அரசாட்சி முறை

பதிகங்கள்

Photo

கல்லா அரசனுங் காலனும் நேரொப்பர்
கல்லா அரசனிற் காலன் மிகநல்லன்
கல்லா அரசன் அறம்ஓரான் கொல்லென்பான்
நல்லாரைக் காலன் நணுகிநில் லானே.

English Meaning:
The ignorant king and Death are cast in equal mould;
Nay, truth to tell, more justly than foolish King,
Death claims his due;
The Witless tyrant no law obeys but in murderous fury kills
But Death, cast in finer mould, nears not the good men true.
Tamil Meaning:
நீதி நூலைக் கல்லாத அரசனும், கூற்றுவனும் யாவரிடத்தும் கொலையே புரிதலால் தம்முள் ஒருபடியாக ஒப்பர். ஆயினும், கல்லா அரசனினும் கூற்றுவனே மிக நல்லவன். என்னை? கல்லா அரசன் தனது அறியாமை காரணமாக ஒரு குற்றமும் செய்யாதார்க்கும் ஆராயாமல் கொலைத் தண்டம் விதிப்பான்; கூற்றுவன் அறமுடையவர்பால் தண்டம் செய்தற்கு அடையான்.
Special Remark:
`அதனால் அரசர்க்கு நீதிநூற் கல்வி இன்றியமை யாதது` என்பது குறிப்பெச்சம். கற்றற்குச் செயப்படுபொருள் வருவிக்கப் பட்டது. `ஆயினும், என்னை` என்பன சொல்லெச்சம். ``அறம்`` என் றது நீதியை. ``ஓரான்`` என்பது முற்றெச்சம். நணுக நில்லான் என்புழி, `தண்டம் செய்தற்கு` என்பது இசையெச்சம். `நலியகில்லானே` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். கல்லா அரசன் அறம் ஓராது கொல்லென் றலை, ``பெண்கொலை செய்த நன்னன்`` (குறுந்தொகை - 292) முதலியோரிடத்துக் காண்க.
இதனால், `நீதிநூலை ஓதி உணர்தல் அரசர்க்கு முதற்கண் வேண்டப்படுவது` என்பது கூறப்பட்டது.