ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 16. அரசாட்சி முறை

பதிகங்கள்

Photo

கால்கொண்டு கட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப்
பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர்
மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரை
மேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே.

English Meaning:
Breath in control held, letting inward fire upward rise,
Mind turned to Samadhi moon-sprung nectar—if they drink not,
But, like inebriates, heady liquors madly consume,
Then, such shall by ruler to just punishment be brought.
Tamil Meaning:
`கால் கட்டி மேல் ஏற்றிப் பால் கொண்டு சோம பானம் செய்க` என்பது யோகியரிடை வழங்குவதொரு குறிப்புச் சொல். அதன் பொருள் `காற்றை (பிராண வாயுவை) இடைகலை பிங்கலை வழிச் செல்லாதவாறு தடுத்து, சுழுமுனைவழிமேல் ஏறச் செய்து, அதனால் வளர்கின்ற மூலக்கனலால் நெற்றியில் உள்ள சந்திரமண்டலத்தினின்றும் வழிகின்ற அமுதத்தை உண்டு சமாதியில் அழுந்திப் பரவசம் எய்தியிருக்க` என்பதேயல்லது, `ஒருவனை இருகால்களையும் கட்டிக்கொண்டு பனை மரத்தின்மேல் ஏறச்செய்து, அவன் அதன் பாளையினின்றும் இறக்கிக் கொணர்கின்ற கள்ளை உண்டு அறிவிழந்திருக்க` என்பது பொருளன்று. அதனால், அவ்வுட் பொருளை உணரும் அறிவிலாதோர் தமக்குத் தோன்றிய வெளிப் பொருளே பொருளாக மயங்கித் தாமும் கள்ளுண்டு களித்துப் பிறரை யும் அவ்வாறு களிக்கச் செய்வர். அப் பேதை மாக்களை ஒறுத்தலை அரசன் தனது முதற்கடனாகக் கொண்டு ஒறுத்தல் வேண்டும்.
Special Remark:
வேள்விக்கண் கொள்ளப்படும் சோமபானத்தைப் புகழ்ந்து கூறலும் இன்னதொரு மயக்க உரையே என்பது தோன்றுதற் பொருட்டுத் திங்களை அப்பெயராற் கூறாது, `சோமன்` என்னும் பெயராற் கூறினார். அதனால் அன்னதொரு வேள்வியை உயிர் நலம் கருதாது உடல் நலத்தின்பொருட்டு அப்பானம் செய்தல் வேண்டி வேட் பார்க்கும் அரசன் அறிவு புகட்டல் வேண்டும் என்பது பெறப்பட்டது. இத்திருமந்திரத்துள், `கால், மேலேற்றல், பால், சோமன்` என்னும் சொற்கள் இவ்விரு பொருள் பயந்து நிற்றல் அறிக. `முகத்தின்கண் சோமனைப் பற்றிப் பால்கொண்டு உண்ணாதார்` எனக் கூட்டுக. செய், `செய்கை` என்னும் பொருட்டாய முதனிலைத் தொழிற் பெயர்.
``காயத்தின் மெய்ஞ்ஞானக் கள்ளுண்ண மாட்டாதே
மாயக்கள் ளுண்டாரென் றுந்தீபற;
வறட்டுப் பசுக்களென் றுந்தீபற`` -திருவுந்தியார் 43
என்றார் திருவுந்தியாரிலும்.
இதனால், அரசன், `கடவுள் நெறியில் பேதை மாக்களது கட்டுரைகள் நிகழ்ந்து குழறுபடை செய்யாதவாறு காத்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.