ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 16. அரசாட்சி முறை

பதிகங்கள்

Photo

திறந்தரு முத்தியுஞ் செல்வமும் வேண்டின்
மறந்தும் அறநெறி யேஆற்றல் வேண்டும்
சிறந்தநீர் ஞாலஞ் செய்தொழில் யாவும்
அறைந்திடில் வேந்தனுக் காறிலொன் றாமே.

English Meaning:
If salvation high and treasures true you seek,
Then, awake or asleep, unceasing, the holy way pursue;
Know that of labour done in this sea-girt world,
To the King, in truth one share in six is due.
Tamil Meaning:
பல சமய நூலாரும் தாம் தாம் அறிந்தவாறு கூறும் யாதொரு முத்தியைப் பெறவேண்டினும், இம்மை மறுமைச் செல்வங் களை எய்த வேண்டினும் அரசன் மறந்தும் தனது அறநெறியினின்றும் வழுவுதல் கூடாது. அதனால், அவன், தன்கீழ் வாழும் குடிகளிடத்து விரும்பற்பாலது அவர்தம் தொழில் வருவாயுள் ஆறில் ஒன்றேயாம்.
Special Remark:
ஆகவே, `அதனின்மேற்பட விரும்புதல் அரசற்குக் குற்றமாம்` என்றபடி. இல்லறத்தார் `தென்புலத்தார் முதலிய ஐந்திடத்து அறமும்` (குறள், 43) செய்ய வேண்டுதலின், ஆறில் ஒன்றிற்கு மேற்பட விரும்புதல் அரசற்குக் குற்றமாயிற்று.
அரசரது ஒழுக்கம் கூறும்வழி அவர்க்குப் பொருள் வருவாயும் கூறவேண்டுதலின், அதனை அறத்தாற்றின் வழுவாது பெறல் வேண்டும் என்பது இதனால் கூறப்பட்டது. `உறுபொருளும், உல்கு பொருளும், தன்ஒன்னார்த் தெறுபொருளும்` (குறள், 756) பெறுதற்கண் அறத்தின் வழுவுதல் உண்டாகாமையின், அவை இங்குக் கூற வேண்டாவாயின.