ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 16. அரசாட்சி முறை

பதிகங்கள்

Photo

நாடோறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாடோறும் நாடி அரன்நெறி நாடானேல்
நாடோறும் நாடு கெடும் மூட நண்ணுமால்
நாடோறுஞ் செல்வம் நரபதி குன்றுமே.

English Meaning:
The Holy Law daily in strictness observe
If he who rules the state fails to seek the Divine way
Day by day that land decays in folly envelopt,
Day by day that ruler`s wealth declines and dwindles away.
Tamil Meaning:
நீதிநூலைக் கற்ற அரசன், அந்நூலின் நோக்கு முதற்கண் வைதிக நெறி மேலும், பின்னர்ச் சிவநெறி மேலும் ஆதலை யறிந்து, நாள்தோறும் தனது நாட்டில் அவை பற்றி நிகழ்வனவற்றை, நாள்தோறும் அயராது ஒற்று முதலியவற்றான் ஆராய்ந்து, அவை செவ்வே நடைபெறச் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யானாயின், அவனது நாடும், செல்வமும் நாள்தோறும் பையப் பையக் குறைந்து, இறுதியில் முழுதுங் கெட்டுவிடும். அவற்றிற்குக் காரணம், யாண்டும் பாவச் செய்கையே மலிதலாம்.
Special Remark:
``நாட்டில்`` என்புழி `நிகழும்` என்பது வருவிக்க. `அவன் நெறி` என்பது பாடம் அன்று. வைதிக நெறி பொதுமையான கடவுள் நெறியாதலின், அதனை, `தவநெறி` என்றார். வைதிக நெறி சைவநெறிகளே நீதி நூலின் நோக்காதலை, மேற்கூறிய உண்மை அந்தணர் அந்நூலை ஓதுவிக்கும்வழி, அவர் அரசனுக்கு உணர்த்து வாராதலின், அரசன் அவ்வழியில் வழுவாது நிற்றல் வேண்டும் என்பதாம். `நரபதி கெடும், குன்றும்` என உடைமையது தொழில்கள், உடையான்மேல் ஏற்றப்பட்டன. ``மூடம்`` என்றது அதன் காரியந் தோன்ற நின்றது. இத்தவநெறி சிவநெறிகளைப் புரத்தலில் வழுவாது நிற்பித்தற்பொருட்டே, `அரசன் பெரியாரைத் துணைக் கொள்ளல் வேண்டும்` (திருக்குறள், 45ஆம் அதிகாரம்) என்றார் திருவள்ளுவர். ஞானசம்பந்தர் ``வேந்தனும் ஓங்குக`` (தி.3 ப.54 பா.1) என அரசனை வாழ்த்தியதும் இது பற்றியே என்பதனைச் சேக்கிழார்,
``ஆளும் மன்னனை வாழ்த்திய தற்சனை
மூளும் மற்றிவை காக்கும் முறைமையால்``
-தி.12 திருஞான.பு. 4-822
என விளக்கினார். இவ்வரச ஒழுக்கத்திற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகத் திருத்தொண்டர் புராணத்துட் போந்த நாயன்மார் சிலரது அரசாட்சியைக் கண்டுகொள்க.
இதனால், அரசன், தன்கீழ் வாழும் மக்கட்கு, நிலை பேறில்லாத உடல் நலத்தை மட்டும் காப்பவனாகாது, நிலையுடைய உயிர் நலத்தையும் காப்பவனாதல் வேண்டும் என்பது கூறப்பட்டது.