ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 14. அக்கினி காரியம்

பதிகங்கள்

Photo

பெருஞ்செல்வங் கேடென்று முன்னே படைத்த
தருஞ்செல்வம் தந்த தலைவனை நாடும்
வருஞ்செல்வத் தின்பம் வரவிருந் தெண்ணி
அருஞ்செல்வத் தாகுதி வேட்கநின் றீரே. 

English Meaning:
Firmly holding that vast riches are a grievous curse
They hungered for the Lord who to us richest treasure gave;
Hoping and dreaming they waited for the immortal prize,
All sacrifices performed, the undying wealth to achieve.
Tamil Meaning:
மறுமைக்கண் வருகின்ற சுவர்க்கச் செல்வத்தால் உளதாகின்ற இன்பம் வருமாற்றை மிக நினைந்து நும் அருஞ் செல்வ மாகிய வேள்வியை வேட்க விரும்புகின்ற அந்தணர்களே, பெரிய `செல்வம், வறுமை` என்னும் இரண்டன் காரணங்களையும் முதற் காலந்தொட்டே விளக்கி நிற்பதாகிய, அனைத்து நலங்களையும் தரும் வேதம் என்னும் அறிவுச் செல்வத்தை நுமக்குத் தந்த முதல்வனாகிய சிவபெருமானை நினையுங்கள்; பயன் எய்துவீர்.
Special Remark:
``என்று`` என்னும் எண்ணிடைச் சொல்லின்பின், ``இரண்டும்`` என்னும் தொகை தொகுத்தலாயிற்று. படைத்தல் - சொல்லால் வெளிப்படுத்தல். `நின்றாரே` என்பது பாடமாயின், ஏகா ரத்தை ஈற்றசையாக்காது, விளியுருபாக்குக. மீமாஞ்சகர் வேதத்தைச் செய்த முதல்வனை அறியாது `வேதம் அனாதி` என மயங்குதலாலும், பிறர் சிவபெருமானையே தலைவனாக உணராமை யாலும் அவர்க்கு வேள்வி முத்தி சாதனமாதல் கூடாமையால், அவர்க்கு அஃது அன்னதாதற் பொருட்டு அவரை நோக்கி இது கூறினார்.
இதனால், வேள்விகளுள் சிவநெறி வேள்வியது இன்றியமை யாமை கூறப்பட்டது.