ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 14. அக்கினி காரியம்

பதிகங்கள்

Photo

அணைதுணை அந்தணர் அங்கியுள் அங்கி
அணைதுணை வைத்ததின் உட்பொரு ளான
இணைதுணை யாமத் தியங்கும் பொழுது
துணையணை யாயதோர் தூய்நெறி யாமே. 

English Meaning:
When the sacrificer in the company of his consort,
Offers oblations to the outer fire and the inner fire,
Maintaining the discipline of yama etc
They proceed along the correct yogic path.
Tamil Meaning:
உயிர்கட்குப் பொருந்திய துணை அந்தணர் வளர்க் கின்ற தீயினுள் தீயாய் இருக்கும் இறைவனே. ஆகவே, தீ வேட்டு அதன் உள்ளீடான இறைவனாகிய அருந்துணையுடன் உலகியலில் ஒழுகும் பொழுதே உயிர் தான் செல்கதிக்குத் துணையாய மெய்ப் பொருளை அடைந்து நிற்றலாகிய நன்னெறியைத் தலைப்படுதல் உண்டாவதாகும்.
Special Remark:
``அணைதுணை`` இரண்டில் பின்னது ஆகு பெயராய், அணைதுணை உள்ள இடத்தைக் குறித்தது. `இணை துணையோடு` என உருபு விரிக்க. யாமம் - இரவு; உலகியல் பிறவித் துன்பத்ததாக லின், அதனை `இரவு` என்றார். ``துணைஅணை`` என்றதில் அணை, முதனிலைத் தொழிற்பெயர்.
`வைதிக வேள்வி வேட்பார்தீயையே தெய்வமாகக்கொண்டு வேட்பர். அது பிறவியை நீக்கும் தூநெறியாகாது; சிவநெறி வேள்வி வேட்பார், தீயைத் தெய்வமாகக் கருதாதது, அத்தீக்கு உள்ளீடாய் நிற்கும் சிவபெருமானையே முதல்வனாகக்கொண்டு வழிபடுவர்; அதுவே பிறப்பை நீக்கும் தூநெறியாகும்` என இதனால் சிவநெறி வேள்வியின் சிறப்புக் கூறப்பட்டது. சிவநெறி வேள்வியில் அக்கினியைச் சிவாக்கினியாகப் பிறப்பித்து வளர்க்கும் முறையைச் சிவாகமங்களில் கண்டுணர்க.