ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 14. அக்கினி காரியம்

பதிகங்கள்

Photo

பாழி அகலுள் எரியும் திரிபோலிட்
டூழி அகலும் உறுவினை நோய்பல
வாழிசெய் தங்கி உதிக்க அவைவிழும்
வீழிசெய் தங்கி வினைசுடு மாமே. 

English Meaning:
All sins fly like wick fast consumed in flame,
All diseases fade that Karma brings in its wake;
They fade and fall in the rising sacrificial fire,
And all evils are scorched that our Karmas make.
Tamil Meaning:
ஆழ்ந்த அகலில் நின்று எரிகின்ற திரிபோலச் சேர்க்கப்பட்டுப் பல்லூழி காலம் தொடர்ந்து நின்று வருத்துகின்ற மிக்க பாவப்பயனாகிய துன்பங்களோ பல. அவை அனைத்தும் ஓமாக்கினி அணையாது நின்று ஓங்க ஒழிவனவாம். அன்றியும், அவ்வக்கினியே வினைக்கட்டு முழுவதையும் அழித்தலையும் செய்யும்.
Special Remark:
பாழி - பள்ளம். `வாழி, வீழி` என்பன, `வாழ்தல், வீழ்தல்` எனத் தொழிற்பெயராய் நின்றன. ``வினைநோய்`` என்றது, `வினையால் வரும் நோய்` என வேற்றுமைத் தொகை. நோய் - துன்பம். `துன்பத்தைத் தரும் வினை` எனவே, `பாவம்` என்பது போந்தது. பின்னர் நின்ற வினை, பொதுப்பட நிற்றலின், இரு வினையையுங் குறித்தது. `பாவத்தை ஒழிக்குமாற்றால் நரகத்தின் நீக்கிச் சுவர்க்கத்தில் சேர்ப்பதும்` இருவினைகளையும் நீக்குமாற்றால் ஞானத்தைத் தோற்றுவித்து வீடு அடைவிப்பதும் வேள்வியாம்` என்றபடி. இவற்றுள் முன்னது வைதிக வேள்வி என்பதும், பின்னது சிவநெறி வேள்வி என்பதும் உணர்ந்துகொள்க.
இதனால், இருவகை வேள்விகளின் பயனும் ஒருங்கு கூறப்பட்டன.