ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 14. அக்கினி காரியம்

பதிகங்கள்

Photo

வசையில் விழுப்பொருள் வானும் நிலனும்
திசையுந் திசைபெறு தேவர் குழாமும்
விசையம் பெருகிய வேதம் முதலாம்
அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே.

English Meaning:
Riches from obloquy free, the spreading sky and earth,
The directions all, and the godly hosts who there hold sway,
All flourish in Victory`s wake when Brahmins true,
With Vedas commencing pursue the sacrificial way
Tamil Meaning:
சோர்வில்லாத அந்தணர் அவியைச் சொரிந்து வேள்வி செய்தவழியே, மழையும், நிலமும், பல நாடுகளும், திசை காவலர் முதலிய தேவர்களும் குற்றம் அற்ற சிறப்பினைத் தரும் பொருளாவார்; அனைத்தும் வெற்றி மிகுதற்கு ஏதுவாகிய வேதமும் முதனூலாய் நிலைபெறும்; அது செய்யாதவழி அத்தன்மைகள் யாவும் இலவாம்.
Special Remark:
ஈற்றடியை முதலில் வைத்து உரைக்க. ``விழுப் பொருள்`` என்பது, வான் முதலிய நான்கு எழுவாய்கட்கும் உரிய பயனிலை. வெற்றியாவது தத்தமக்குரிய பெருமையைத் தப்பாது பெறுதல். அதனைப் பெறுதற்குரிய வழியைக் கூறுவது வேதம். அது நிலைபெறுதலாவது, மறக்கப்பட்டொழியாது, ஓதப்பட்டு நிற்றல். `ஒழுக்கம் ஒழிந்தபின், அதனைக் கூறும் நூலால் பயனின்றிப் போம்` என்பது கருத்து. இதனானே,
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப் பொழுக்கம் குன்றக் கெடும். -குறள் 134
எனக் கூறினார் திருவள்ளுவர்.
மழை விழுப் பொருளாதலாவது, காலத்தில் பொய்யாது பொழிதல். நிலம் விழுப்பொருளாதலாவது, விளைவு குன்றாது மிகுதல். நாடுகள் விழுப்பொருளாதலாவது, அவ்வந்நாட்டுப் பண்டங் கள் குன்றாது பெருகல். தேவர் விழுப்பொருளாதலாவது, உவகை மேலீட்டால் மேலனவற்றை யெல்லாம் பயன்தரச் செய்தல். `அந்தணர் வேத விதியை ஆறங்கங்களாலும் உணர்ந்து, உணர்ந்தவாறே வேள்வியைத் தப்பாது செய்தலாலே நாடு, பசியும் பிணியும் நீங்கி, வசி யும், வளனும் சுரப்பதாகின்றது` என்பதனைத் திருஞானசம்பந்தரும்,
``கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே
செற்றார் வாழ்தில்லை`` (தி.1 ப.80 பா.1)
என்பதனால் குறித்தருளினார். உலக நலம் கருதி இதனைச் செய்தலானே இவர் `அந்தணர்` என்னும் காரணப்பெயர் எய்தினர். எனினும், `புலால் மறுத்தும், கொல்லாதும், அனைத்துயிர்மேலும் அருளுடையார்க்கே அது முற்றப் பொருந்தும்` என்றதற்கு, ``அந்தணர் என்போர் அறவோர்`` (குறள் - 30) என்றார் திருவள்ளுவர். சோர்வின்மை, நெறிமுறைகளில் உறைத்து நிற்றல்.
இதனால், முத்தீ வேள்வியது இன்றியமையாமை கூறப் பட்டது.