ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 14. அக்கினி காரியம்

பதிகங்கள்

Photo

போதிரண் டோதிப் புரிந்தருள் செய்திட்டு
மாதிரண் டாகி மகிழ்ந்துட னேநிற்கும்
தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள்
வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறே. 

English Meaning:
Morn and eve, when in devotion rapt they chant,
The two goddesses (Gayatri and Savitri) with them in smiling grace stand;
Then do the two birds of one seed sprung
Karmas, good and bad, fluttering in haste depart.
Tamil Meaning:
இருவகை மலர்களின் வண்டுகள் போல்வன வாகிய உயிர்கள், தாம் தாம் விரும்பும் வழியில் வேட்கை மிக்குச் செல் கின்றவாற்றால், அவற்றது நெஞ்சத் தாமரையில் வாழ்கின்ற சத்தியும் இருவேறு வகைப்பட்டு, உரிய காலத்தில் இருவேறு நூல்களைக் கற்கச் செய்து அவைகட்குக் கருணை புரிந்து, எஞ்ஞான்றும் அவைகளோடு உடனாய் நிற்பாள்.
Special Remark:
பின்னிரண்டடிகளை முதலில் வைத்து உரைக்க. போது - பொழுது. ``இரண்டு ஓதி`` என்றதில் இரண்டு, வேத சிவாகமங்கள். ``ஓதி`` என்பதில் பிறவினை விகுதி தொகுத்தலாயிற்று. மாது - சத்தி. அவள் இரண்டாதலாவது, திரோதான சத்தியும், அருட் சத்தியுமாய் அவ்வவ்வுயிருக்கேற்ப நிற்றல். திரோதானமும் ஒரு வகைக் கருணையே ஆதலின், `அருள் செய்திட்டு` என்றார். ``தாதிரண் டாகிய`` என்பதில், ஆதல், மேற் சொல்லுதல். ``இரண்டின் கண் ஆகிய`` என உருபு விரிக்க. தாது இரண்டு - இருவகை மகரந்தம்; அவை, குவளை, ஆம்பல் முதலிய சிறு மலரின்கண் உள்ளனவும், தாமரையாகிய பெரு மலரின்கண் உள்ளனவுமாம். ``தண்ணம் பறவை`` என்பதில் தண்மை, சிறுமை மேல் நின்றது. அம், சாரியை. வண்டினை `பறவை` என்றல் இலக்கிய மரபு. ``பாம்பின் வாய்த் தேரை வாய்ச் சிறுபறவை `` (தி.2 ப.76 பா.6) என்றார் திருஞானசம்பந்தரும். வேது - வேற்றுமை. இனத்தால் ஒன்றாயினும் விரும்பப்படும் தாது வேற்றுமையால் இரண்டாய் நிற்கின்ற வண்டு போல, உயிர்கள் அனைத்தும் இனத்தால் ஒன்றாயினும், விரும்பப்படும் பயனால் இரண்டு ஆதலாவது, உலகின்பமும், வீட்டின்பமும் ஆகியவற்றை விரும்பு தலால் `உலகர்` எனவும், `சத்தி நிபாதர்` எனவும் இருதிற னாய் நிற்றல். எனவே, சிவசத்தி உலகர்க்குத் திரோதாயியாய் நின்று வேதத்தை ஓது வித்து, அதன் பயனாக வைதிக வேள்வியை வேட்பித்து உலகின் பத்தை அடைவிப்பவளாயும், சத்தி நிபாதர்க்கு அருட்சத்தியாய் நின்று சிவாகமங்களை ஓதுவித்து, அதன் பயனாகச் சிவநெறி வேள்வியை வேட்பித்துச் சிவானந்தத்தை அடைவிப்பவளாயும் நிற்பாள் எனக் கூறுமாற்றால் வேள்விகளது வகை கூறியவாறு. வெறித்தல் - மதர்த்தல். `வெறிக்கின்றவாற்றால்` என்னும் உருபு தொகுத்தலாயிற்று.
இதனால், `உலகவேள்வி, சிவவேள்வி` என்னும் வேள்வி களது வகையும், பயனும் உணர்த்தப்பட்டன.